'அனுதினமும் ஒரு அதிசயம்' மின்னஞ்சலின் துவக்கம்
தினசரி உன் இன்பாக்ஸில் எங்கள் பெயர்களைப் பார்க்கிறாய். எனவே நீ எங்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் நன்றாக தெரிந்துகொள்ள வேண்டிய நேரம்தான் இது என்று நாங்கள் நினைக்கிறோம்.
முதலாவது, நான் என்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறேன் - என் பெயர் கேம்ரன். என் மனைவியின் பெயர் ஜெனி, அவள் தன்னைப் பற்றி நாளை உன்னுடன் பகிர்ந்துகொள்வாள். நாங்கள் இருவரும் இணைந்து, ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற இந்த மின்னஞ்சலை தினமும் உனக்காக எழுதுவோம். 😃
என்னைப் பற்றிய சில வேடிக்கையான உண்மைகளை இங்கே நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்: எனக்குப் பிடித்த விளையாட்டு பூப்பந்து விளையாட்டு, என்னால் மணிக்கணக்காக அந்த விளையாட்டை விளையாட முடியும். எனக்கு 18 வயதாக இருந்தபோதிலிருந்தே, ஹிந்தியில் பல ஆராதனைப் பாடல்களை எழுதியுள்ளேன். உணவுகளில் எனக்கு மிகவும் பிடித்த உணவு மட்டன் பிரியாணி. என் தாய்மொழி ஹிந்தியாக இருந்தாலும், தமிழ் மொழி மீதும் நம் இந்தியாவின் மீதும் எனக்கு மிகுந்த பற்று உள்ளது.
“கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்” என்ற வசனம் வேதத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான வசனங்களில் ஒன்று (சங்கீதம் 138:8). இந்த வசனம் என் வாழ்விற்கு வழிகாட்டும் ஒளியாக இருந்து வருகிறது. பல சோதனைகளின் வழியாக நான் கடந்துசென்றபோது, ரோமர் 8:28ல் வாக்குப்பண்ணியபடி, ஆண்டவர் ஏற்ற நேரத்தில் எனக்காக யாவற்றையும் செய்து முடிப்பதையும், அவற்றை நன்மைக்கு ஏதுவாக நடக்கச் செய்ததையும் நான் பார்த்திருக்கிறேன்.
நான் யெஷுவா ஊழியங்கள் மூலமாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராதனைக் குழு தலைவராகவும் பாடலாசிரியராகவும் அறியப்படுகிறேன்.
நான் பாடிய சில பாடல்களை நீ கேட்கவோ அல்லது பார்க்கவோ விரும்பினால், இந்த இணைப்பை(link1, 2, 3, 4, 5) க்ளிக் செய்து கேட்கலாம்:
இந்தியாவில் ஒரு போதகரின் மகனாக வளர்ந்த நான், என் பெற்றோர் கடுமையான விதத்தில் சரீரப்பிரகாரமாகவும் மனதளவிலும் உபத்திரவத்தை சகிக்க நேரிட்டபோதிலும், அவர்கள் ஆண்டவரிடத்தில் கொண்டிருந்த அசைக்க முடியாத அர்ப்பணிப்பை நான் பார்த்திருக்கிறேன். உபத்திரவத்தால் கட்டுப்படுத்த முடியாத ஒரு ஊழியத்தின் மூலமாக உலகம் முழுவதும் சுவிசேஷத்தைப் பரப்ப வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது - யெஷுவா ஊழியங்களின் பாடல்கள் சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் வாயிலாக லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைவதன் மூலம், அது இப்போது நிறைவேறுகிறது.
ஜனவரி 2024ம் ஆண்டு, நானும் என் மனைவி ஜெனியும், 'அனுதினமும் ஒரு அதிசயம்' என்ற மின்னஞ்சல் ஊழியம் செய்யும் Jesus.net குழுவைச் சந்தித்தோம். வலைதளம் மூலம் நற்செய்தி அறிவிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் அவர்களது ஊழியம், எங்களது தரிசனத்துடன் முழுமையாக ஒத்துப்போவதை நாங்கள் உணர்ந்தோம். அவர்களுடன் இணைந்து ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலை இந்தியாவில் உள்ள மக்களுக்காக எழுத முடிவு செய்தோம். இதுவே ‘அனுதினமும் ஒரு அதிசயத்துக்கான’ எங்களது புதிய ஆரம்பமாகும்.
