வெளியீட்டு தேதி 30 அக்டோபர் 2023

அன்பரே, ஆண்டவர் உன்னை தயவோடு நோக்கிப் பார்க்கிறார்!

வெளியீட்டு தேதி 30 அக்டோபர் 2023

ஒரு சிறுவனுக்கு, இரத்தம் ஏற்ற வேண்டிய சூழலில் வாழ்ந்த ஒரு சகோதரி இருந்தாள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவன் குணமடைந்த அதே நோய் அவனது சகோதரி மேரிக்கு இருப்பதாகவும், மேரி உயிர் பிழைப்பதற்கான ஒரே வாய்ப்பு ஏற்கனவே அதே நோயிலிருந்து மீண்ட ஒரு நபரிடமிருந்து இரத்தமாற்றம் செய்வதுதான் என்றும் மருத்துவர் அவனிடம் விளக்கினார்.

"உன் இரத்தத்தை உன் சகோதரி மேரிக்குக் கொடுக்க விரும்புகிறாயா?" என்று மருத்துவர் அந்த சிறுவனிடம் கேட்டார். முகிலன் சற்று தயங்கினான். அவன் கீழ் உதடு நடுங்க ஆரம்பித்தது. பின்னர் அவன் புன்னகைத்துவிட்டு, “நிச்சயமாக என் சகோதரிக்காகக் கொடுப்பேன்!” என்றான். இரண்டு குழந்தைகளும் விரைவில் மருத்துவமனையில் இருந்த ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஒரு செவிலியர் முகிலனின் கையில் ஊசியை செலுத்தினாள். அந்த வேதனை ஏறக்குறைய முடிந்ததும், முகிலனின் லேசாக நடுங்கும் குரல் மௌனத்தைக் கலைத்தது... "டாக்டர், நான் எவ்வளவு சீக்கிரம் சாகப் போகிறேன்?" என்று அவன் கேட்டான். சிறுவன் ஏன் தயங்கினான் என்பது அந்த நிமிடத்தில்தான் டாக்டருக்குப் புரிந்தது. தன்னுடைய ரத்தத்தைக் கொடுப்பது என்பது தன் உயிரையே இழப்பது என்று அர்த்தம் என்பதாக அவன் நினைத்திருந்தான்.

நாம் ஒவ்வொருவரும் மேரியை விட மிகவும் மோசமான நிலையில் இருந்தோம், நம்மை இரட்சிக்கும்படிக்கு இயேசு தம்முடைய இரத்தத்தையும் ஜீவனையும் கொடுக்க வேண்டியிருந்தது.  (வேதாகமத்தில் 1 பேதுரு 1:19ஐ வாசித்துப் பார்க்கவும்)

வேதாகமம் இதைப் “பாவ நிவாரணம்” என்று அழைக்கிறது. இந்த வார்த்தை கிரேக்க வார்த்தையான "ஹிலாஸ்கோமாய்" என்பதிலிருந்து வந்தது, அதாவது "ஒருவரை சாந்தப்படுத்துதல், சமாதானப்படுத்துதல், தயவு காட்டுதல்" என்பதே இதன் அர்த்தமாகும். எபிரெயர் 9:22-ல், ஒரு குற்றவாளியின் இடத்தில் ஒரு குற்றமற்றவரின் இரத்தம் சிந்தப்படுவதன் மூலம் பாவ நிவாரணம் செய்யப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அன்பரே, இயேசுவின் இரத்தத்தின் நிமித்தமாக, ஆண்டவர் உன்னை தயவோடு பார்க்கிறார்! இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்திற்காக என்னுடன் சேர்ந்து நீ ஆண்டவரைத் துதிக்கலாமே! 

பரிசுத்த ஆவியானவர்... கிரியை செய்கிறார்: இயேசுவின் இரத்தம் எல்லாவற்றைக் காட்டிலும் விலையேறப்பெற்றது... அவருடைய பாவநிவாரண பலிக்காக ஆண்டவருக்கு நன்றி!

"கல்வாரியின் கருணையிதே

காயங்களில் காணுதே 

கர்த்தன் இயேசு பார் உனக்காய் 

பாடுகள் சகித்தாரே

 

விலையேறப்பெற்ற திரு இரத்தமே- அவர் 

விலாவினின்று பாயுதே 

விலையேறப்பெற்றோனாய் உன்னை 

மாற்ற விலையாக ஈந்தனரே"

இந்த பாடலை இங்கே காணலாம்.

Eric Célérier
எழுத்தாளர்