இதுவரை நீ தேவனிடத்தில் சொன்ன மோசமான விஷயம் எது?
நேற்று, ஆண்டவர் யோபுவின் நண்பர்களைப் பார்த்து, “உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை” என்று சொன்னதாக வாசிக்கிறோம் (யோபு 42:7). ஆண்டவர் யோபுவின் நண்பர்களைக் கடிந்துகொண்டார்; ஆனால் யோபுவைக் கடிந்துகொள்ளவில்லை, ஏன் அப்படிச் செய்தார் என்று எப்போதாவது யோசித்திருக்கிறாயா?
யோபு உட்பட, அவர்கள் அனைவருமே சில மோசமான விஷயங்களைச் சொன்னார்கள். சொல்லப்போனால், யோபு தான் பிறந்த நாளை சபித்தார், ஏனென்றால் அவர் அவ்வளவு பரிதாபமான நிலையில் இருந்தார் (யோபு 3:3). ஆனாலும் இறுதியில், ஆண்டவர் யோபு மீது கோபப்படவில்லை; மாறாக அவரது நண்பர்கள் மீது கோபப்பட்டார். ஏன் என்று தெரியுமா?
என்னைப் பொறுத்தவரையில், யோபு இவற்றை ஆண்டவரிடத்தில் சொல்லிக்கொண்டிருந்தார். அவை வெளிப்படையான மற்றும் அப்படியே சொல்லப்பட்ட வார்த்தைகளாகத் தோன்றலாம்; ஆனால் அந்த வார்த்தைகள் ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டுச் செல்லும்போது, அவை ஜெபங்களாக மாறுகின்றன! ஜெபத்தில் நம்முடைய வேதனை நிரம்பிய விண்ணப்பங்களை ஆண்டவரின் பாதத்தில் வைப்பது முக்கியம்; இல்லையெனில் நாம் சுயபரிதாபத்தில் விழுந்துவிடுவோம். அழுவது நல்லதுதான், ஆனால் ஜெபிப்பது அதைவிட மேலானது!
அன்பரே, நீ பிறந்திருக்கவே கூடாது என்று எப்போதாவது நினைத்திருக்கிறாயா? நீ நினைத்திருப்பாய் என்றும், அந்த அவநம்பிக்கையிலிருந்து நீ நிச்சயம் விடுபட்டிருப்பாய் என்றும் நான் நம்புகிறேன், அதே சமயத்தில் நான் அப்படி நினைத்ததில்லை என்று சொல்வேனேயானால் நான் பொய் சொல்லுகிறவளாய் இருப்பேன். எங்கள் மகனின் வியாதிப்படுக்கையின் இருளான தருணங்களில், யோபுவைப் போலவே, ஆண்டவரை நோக்கி, நான் வெளிப்படையான மற்றும் அப்படியே சொல்லப்பட்ட வார்த்தைகளை ஜெபங்களாக ஏறெடுத்திருக்கிறேன்.
நம் பாதிக்கப்பட்ட உண்மையான உணர்வுகளை ஆண்டவரால் மட்டுமே கையாள முடியும். அது அவருக்குக் கடினமாய் இராது. நாம் அவற்றைச் சொல்வதற்கு முன்பே, அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்.
அன்பரே, இன்று நீ ஆண்டவரைப் பற்றி என்ன நினைக்கிறாய்? நீ வருத்தப்படும் விஷயங்கள் ஏதாகிலும் உண்டா? நீ மறக்கப்பட்டுவிட்டதாகவோ அல்லது கைவிடப்பட்டதாகவோ உணர்கிறாயா? எல்லாவற்றையும் அவரிடம் சொல்! ஆண்டவரிடத்தில் உண்மையாக இருந்து, இன்று நமது அழுகைகளை ஜெபங்களாக மாற்றுவோம். இந்த ஜெபத்தை உன் சொந்த வார்த்தைகளில் (உண்மையாக இரு!) சொல்லி முடி: ‘ஆண்டவரே, இன்று நான் இவ்வாறு நினைக்கிறேன்….’ என்று ஆண்டவரிடம் சொல்.
