உங்களுக்கு மீட்பு தேவைப்படுகிறதா?
ஏறக்குறைய 3,500 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரவேல் மக்கள் பெற்றுக்கொண்ட அசாதாரண விடுதலையைப் பற்றி இன்று நான் உங்களுடன் பேச விரும்புகிறேன் - இன்று உங்களுடைய வாழ்வுக்கு இது எவ்வாறு ஒத்துப்போகிறது 🤔 “எகிப்தியர் அடிமைகொள்ளுகிற இஸ்ரவேல் புத்திரரின் பெருமூச்சையும் நான் கேட்டு, என் உடன்படிக்கையை நினைத்தேன்.” (யாத்திராகமம் 6:5) ஒடுக்கப்பட்டு, தாக்கப்பட்டு, பட்டினி கிடந்து, 400 ஆண்டுகளுக்கும் மேலாக மோசமான சூழ்நிலையில் வைத்து, அவர்களை அடிமைப்படுத்திய இரக்கமற்ற பார்வோன் மன்னர்களுக்காக எபிரேயர்கள் இடைவிடாமல் உழைத்தனர் (சம்பவம் இங்கே தொடங்குகிறது). தம்முடைய மக்களது துயரம் நிறைந்த கூக்குரல்களை ஆண்டவர் கேட்டபோது, அவர் வல்லமை வாய்ந்த விதத்தில் குறுக்கிட்டு கிரியை செய்ய முடிவு செய்தார். ஆண்டவர் மாறிவிடவில்லை. அவர் இன்று உங்கள் வாழ்க்கையில் செயல்பட விரும்புகிறார் மற்றும் நீங்கள் அடிமையாக இருக்கும் வேதனையான சூழ்நிலை எதுவாக இருந்தாலும், அதிலிருந்து உங்களை இரட்சிக்க விரும்புகிறார்.
- நீங்கள் உடல்நலப் பிரச்சனைகளால் போராடிக்கொண்டிருக்கிறீர்களா?
- ஏதோ ஒரு அடிமைத்தனத்திலிருந்து விடுபட போராடிக்கொண்டிருக்கிறீர்களா?
- (பொருளாதார) சிக்கலை எதிர்கொள்கிறீர்களா?
- திருமணத்துக்காகவோ அல்லது குழந்தைக்காகவோ ஏங்கிக்கொண்டிருக்கிறீர்களா?
உங்கள் அழுகையை அவர் கேட்டிருக்கிறார், அன்பரே, சர்வவல்லமையுள்ள ஆண்டவர் தம்முடைய வல்லமையையும் மகிமையையும் வெளிப்படுத்த எப்போதும் ஆயத்தமாக இருக்கிறார்!
நீங்கள் நீண்ட காலமாக ஆண்டவரிடத்தில் அழுது கொண்டிருந்தால், மனம் தளராதீர்கள்: "இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை." (ஏசாயா 59:1) தேவன் இஸ்ரவேலரை விடுவித்ததுபோல, சரியான நேரத்தில் உங்களையும் விடுவிப்பார். மோசே மூலம் இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொன்னதையே அவர் இன்றும் உங்களுக்குச் சொல்கிறார்: “பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்." (யாத்திராகமம் 14:13) அன்பரே, இன்று உங்களுக்கு மீட்பு தேவைப்படுமானால், ஆண்டவர் உங்களைப் பார்த்து இந்தப் பாடலைப் பாடுவது போல்நினைத்துக்கொண்டு, இந்தப் பாடலைக் கேட்க உங்களை உற்சாகப்படுத்துகிறேன். எங்கள் மகன் மருத்துவமனையில் இருந்தபோது, நான் இந்தப் பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தேன். நீங்களும் இதைக் கேட்டு மீட்படையலாம்.
