ஒரு காரியம் செய்!
எப்போதாவது, யாராவது உன்னிடம், ‘ஒரு காரியம் செய்’ என்று சொல்லிவிட்டு, செய்ய வேண்டிய காரியங்களின் பட்டியலைத் தர ஆரம்பித்திருக்கிறார்களா? சொல்லப்போனால், இது ஒரு இந்திய பழக்கம், என் வெளிநாட்டு நண்பர்கள், “நீ எப்போதும் ‘ஒன்றைச் செய்’ என்று சொல்லிவிட்டு, செய்வதற்கான ஐந்து காரியங்களை எங்களுக்கு நியமிக்கிறாய்” என்று என்னிடம் சொல்லும்வரை இதைப் பற்றி எனக்குத் தெரியாது.
சரி, ஆண்டவருக்கும் ஒரு இந்திய இதயம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன் ;) வேதாகமத்தில் ‘தேவையானது ஒன்றே’ என்ற சொற்றொடர் ஐந்து முறை வெவ்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் நம் கிறிஸ்தவ வாழ்க்கைக்குத் தேவையான வெவ்வேறு காரியங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
அன்பரே, வரும் நாட்களில், அந்த ஐந்து முறை ‘தேவையானது ஒன்றே’ என்று சொல்லப்பட்ட ஒவ்வொரு காரியத்தையும் நாம் சேர்ந்து தியானிப்போம். இன்று, எனக்குப் பிடித்த சம்பவமான லூக்கா 10ஆம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காரியத்திலிருந்து நாம் தியானிக்கத் தொடங்குவோம்:
“இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேகக் காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்." (லூக்கா 10:41-42)
இந்த சம்பவத்தில், விருந்தினரை உபசரிக்கும்படியான அனைத்து வேலைகளையும் தனியாகச் செய்யும்படி, தன்னை விட்டுச் சென்றுவிட்டாள் என்று, கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்திருந்த தன் சகோதரி மரியாளைக் குறித்து மார்த்தாள் இயேசுவிடம் முறையிடுகிறாள். மார்த்தாள் அநேக காரியங்களைச் செய்கிறாள், ஆனால் மரியாளோ ஒரே ஒரு காரியத்தைச் செய்கிறாள் — அது மிகவும் தேவையான ஒன்று மற்றும் மிகவும் அவசியமான ஒரு காரியமாகும்.
நம் வாழ்க்கையிலும், நாம் பெரும்பாலும் ஆயிரம் வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய முயற்சிக்கிறோம், அவற்றில் பல, மார்த்தாளின் வேலைகளைப் போலவே முக்கியமானவை அல்ல என்பது நிச்சயமாக நமக்குத் தெரியும். ஆகவே, இயேசுவோடு நேரத்தை செலவிடும்போது, ஒரு நேரத்தில் ஒரு காரியத்தைச் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
மார்த்தாளும் மரியாளும் இயேசுவுக்கு நெருக்கமானவர்களாக இருந்தனர், ஆனால் மார்த்தாள் தனது வேலைகளால் கவலைப்பட்டுக் கலங்கியதாக வேதாகமம் கூறுகிறது (லூக்கா 10: 40).
அன்பரே, இன்று எந்த கவனச்சிதறலும் இல்லாமல் இயேசுவின் பாதத்தில் நேரத்தை செலவிட உன்னை ஊக்குவிக்கிறேன்!
ஒரு காரியம் செய் - அமைதியான ஒரு இடத்தைக் கண்டுபிடித்து உன் மொபைலை அணைத்து வை. 10 நிமிடம் ஒதுக்கி, இந்த ஜெபத்தை உன் இதயத்தில் ஏறெடு, 'இயேசுவே, நான் வந்திருக்கிறேன்' என்று சொல். இப்போது உன் எண்ணங்கள் அலைபாய்வதை நீ உணரலாம், அது சாதாரணமானதுதான், ஆனால் இந்த வரியை மீண்டும் சொல்லி, 'இயேசுவே, நான் வந்திருக்கிறேன்' என்று அவரைக் கூப்பிடு. மீண்டும் உன் கவனத்தை அவர் மீது செலுத்து.
நீ எப்படி உணர்ந்தாய்? உன் அனுபவத்தை எங்களோடு பகிர்ந்துகொள்!
