வெளியீட்டு தேதி 15 ஜனவரி 2024
கிறிஸ்தவ வாழ்க்கை மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது!
வெளியீட்டு தேதி 15 ஜனவரி 2024
அன்பரே, கிறிஸ்தவ வாழ்க்கை வெறும் ஒரு மதம் என்று நீ எப்போதாவது யோசித்திருக்கிறாயா? அது ஏன் வெறும் ஒரு மதமாக மட்டும் இல்லை என்பதற்கான விளக்கத்தை இங்கே காணலாம்…
- இயேசு ஸ்தாபித்துச் சென்ற கிறிஸ்தவ வாழ்க்கையானது மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது... இது அன்பான ஆண்டவருடனான உண்மையான உறவு. இது ஆண்டவரைப் பற்றிய அறிவையும் தத்துவ ஞானத்தையும் வளர்த்துக்கொள்வது மட்டுமல்ல... அவருடைய ஜீவனையும் பிரசன்னத்தையும் நாளுக்கு நாள் அனுபவிப்பதும், அவருடைய வார்த்தையால் மாற்றமடைவதுமாகும்.
- வேதாகமம் என்பது நாம் வாசிக்கும் ஒரு கதைப் புத்தகத்தைப் போன்றதல்ல; அது ஒரு புனிதமான புத்தகம்... அது இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் நமது வாழ்விற்குள் நுழைந்து நம்மைப் பகுத்தறியும் ஜீவனுள்ள வார்த்தையாக இருக்கிறது (வேதாகமத்தில் எபிரேயர் 4:12ஐப் பார்க்கவும்). "தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது."
- ஜெபம் என்பது வெறுமனே வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பதல்ல; அதிலும் மேலான ஒரு அனுபவம்... அது ஆண்டவரோடு கூட உரையாடுவதாகும். இது ஒரு பரிமாற்றமாகவும் உண்மையான ஐக்கியமாகவும் இருக்கிறது. (வேதாகமத்தில் சங்கீதம் 102:16ஐப் பார்க்கவும்)
- ஐக்கியம் என்பது அவ்வப்போது திருச்சபைக்குச் செல்வது மட்டுமே அல்ல (அது பயனுள்ளதாக இருந்தாலும் கூட), அதிலும் மேலானது... நம்மோடு கூட பேசுகிறவரும், நம்மீது அசைவாடுபவரும் மற்றும் நமக்கு அற்புதங்களைச் செய்பவருமான ஜீவனுள்ள தேவனுடைய பிரசன்னத்தை அனுபவிப்பதே ஐக்கியமாகும். அன்பரே, ரோமர் 8:15ல் எழுதப்பட்டுள்ளபடி, ஆண்டவர் தம்முடைய அளவிடமுடியாத கிருபையினால், அவருடைய ஆவியை உனக்குள் வைத்திருக்கிறார், மேலும் நீ அவரை அப்பா பிதாவே என்று கூப்பிடத்தக்கதாக, உனக்கு உரிமையை வழங்கியிருக்கிறார்.
உன் கிறிஸ்தவ வாழ்க்கையானது ஒரு சாதாரண மதத்தைக் கடைப்பிடிக்கும் பழக்கம் என எண்ணி, அதை மட்டுப்படுத்தாதே. மாறாக, சகலத்தையும் சிருஷ்டித்தவரையும், சகலத்தையும் தமக்குச் சொந்தமாகக் கொண்டவரையும் 'அப்பா... பிதாவே' என்று கூப்பிடப்பண்ணுகிற இந்த மகிமையான அனுபவத்திற்குள்ளாகப் பிரவேசி!
ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக!
