சற்று கவனி, இது தவறு ❌
நம்முடைய விசுவாசப் பயணத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, நமது தனிப்பட்ட மாற்றமும் ஆவிக்குரிய மாற்றமும்தான், இது இயேசுவைப் போல மாறுவதற்காக நமது பழைய வழிகளை விட்டுவிடுவதைக் குறிக்கிறது.
பாவ அறிக்கை, தமது வார்த்தையின் வெளிப்பாடுகள் மற்றும் சோதனைக் காலங்கள் உட்பட பல்வேறு வழிகளில் ஆண்டவர் ஆவிக்குரிய மாற்றத்தைக் கொண்டுவருகிறார்.
சில சமயங்களில், அறிவுறுத்தல், திருத்தம் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மூலம் நம்மை சரியான திசையில் சுட்டிக்காட்ட நம் வாழ்வில் நாம் சந்திக்கும் மக்களை அவர் பயன்படுத்துகிறார்; ஐயோ, அவை நமக்குப் பிடித்த வார்த்தைகள் அல்ல, அப்படித்தானே?
"இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேதிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான்." (நீதிமொழிகள் 27:17)
அறிவுறுத்தல், திருத்தம் மற்றும் ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாய் இருக்க வேண்டும் என்பதே இன்றைய தீர்மானமாகும், ஏனென்றால் மற்றவர்கள் உன்னை அவ்வாறுதான் வடிவமைக்கிறார்கள்.
- “பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான். ஞானமுள்ளவனுக்குப் போதகம்பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம் பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான்." (நீதிமொழிகள் 9:8-9)
- "புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்து கொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்." (நீதிமொழிகள் 12:1)
- "ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடான்." (நீதிமொழிகள் 13:1)
- "திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான்." (நீதிமொழிகள் 13:13)
- "புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்." (நீதிமொழிகள் 15:32)
- "உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக." (நீதிமொழிகள் 23:12)
நம்மை ஒழுங்குபடுத்த, நம் பெற்றோர், ஆசிரியர்கள், போதகர்கள் மற்றும் நண்பர்கள் என நமக்கு நெருக்கமானவர்களையே பொதுவாக ஆண்டவர் பயன்படுத்துகிறார். அவர்கள் எப்பொழுதும் சரியாக இருப்பதில்லை என்றாலும், அவர்களது சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்வது புத்திசாலித்தனமானது, ஏனென்றால், பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மூலமாக மதிப்புமிக்க ஒன்றை உனக்குக் கற்பிக்கிறார் என்பதை நீ நன்கு அறிந்திருக்கிறாய்.
"சீர்திருத்தத்தின் மீதான உன் கோபத்தின் அளவு உன் பெருமையின் அளவிற்கு சமம்" என்று ஜான் பால் ஜாக்சன் என்பவர் கூறுகிறார்.
அன்பரே, உன்னைச் சுற்றி உனக்கு அறிவுரை கூறும் ஞானமுள்ளவர்களுக்காகவும் முதிர்ச்சியடைந்த மக்களுக்காகவும் ஆண்டவருக்கு நன்றி சொல்ல சற்று நேரம் ஒதுக்கு. உனக்கு அவர்கள் அறிவுரை கூறும்போது, உன் வாழ்க்கையில் அவர்களிடமிருந்து நீ பெறும் நன்மைக்காக, நீ எவ்வளவு நன்றியோடு இருக்கிறாய் என்பதை அவர்களுக்குச் சொல்வதன் மூலம் நன்றிகளைத் தெரிவி.
