அன்பரே, தைரியமாகக் கேள்!
ரூத்தின் பயணம் எனக்கு மிகவும் பிடிக்கும். வேதாகமத்தில் உள்ள ஒரு புத்தகத்திற்கு ரூத்தின் பெயரையே வைக்கும் அளவிற்கு அவளுடைய கதை மிகவும் ஊக்கமளிக்கிறதாய் இருக்கிறது!
ரூத்துக்கு உதவி தேவைப்பட்டது: தன்னையும் தன் மாமியார் நகோமியையும் போஷிக்க வேண்டிய சூழ்நிலையில் அவள் அதற்கான ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. அவள் போவாஸ் என்னும் பெயருடைய ஒருவனுக்குச் சொந்தமான வயல் நிலத்துக்குப் போய், அங்கே தானியங்களைப் பொறுக்கிக்கொள்ள அவனிடம் அனுமதி கேட்டாள்.
ரூத் உதவி கேட்பதற்குத் துணிந்தாள். அவள் ஒரு தீர்வைத் தேடாமல் அப்படியே இருந்துவிடவில்லை. தனக்கு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு உதவி கேட்டாள்!
சில சமயங்களில் நமக்கும் உதவி தேவைப்படுகிறது. ஆனால் நாம் எப்போதும் கேட்கத் துணிவதில்லை. ஆனாலும், நாம் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும் என்பதற்காக ஆண்டவர் நம்மைப் படைத்திருக்கிறார்!
அன்பரே, நீ இருக்கும் ஒரு சூழ்நிலையில், உனக்கு உதவி தேவைப்படுமானால், உன்னால் தனியாக அதை சமாளிக்க முடியாதபோது… உதவி கேட்கத் தயங்க வேண்டாம்! உன்னைச் சுற்றியுள்ளவர்களிடம், குறிப்பாக உனக்காக ஜெபிக்கக்கூடிய மற்ற கிறிஸ்தவ சகோதர சகோதரிகளிடம் உதவி கேள்.
ரூத் போவாசிடம் உதவி கேட்டது நன்மைக்கு ஏதுவாக மாறியது... அவள் சாப்பிடும்படியாக தனது வயலிலிருந்து தானியங்களைப் பொறுக்கிக்கொள்ள போவாஸ் அவளுக்கு அனுமதி அளித்தது மட்டுமல்லாமல், அதற்குப் பின், அவன் அவளைத் தனது பாதுகாப்பு செட்டைகளின் கீழ் சேர்த்துக்கொண்டு அவளுக்கு வாழ்வளித்தான்.
"ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே." (வேதாகமத்தில் பிரசங்கி 4:9-10ஐப் பார்க்கவும்)
ஆண்டவர் நம் ஜெபங்களைக் கேட்டுக்கொண்டு இருக்கிறார், அவைகளுக்குப் பதிலளிக்கும்படி மற்ற நபர்களைப் பயன்படுத்துகிறார்! எனவே உதவி கேட்க பயப்பட வேண்டாம்.
சாட்சி: “இந்த அனுதின செய்திகளை நான் முதன்முதலில் பெற்றுக்கொள்ளத் துவங்கியபோது, என் மகள் வேலையில்லாமல், பல இடங்களுக்குச் சென்று நிராகரிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வந்தாள். அவளுடைய வாழ்க்கையில் ஆண்டவருடைய வழிநடத்துதலுக்காக நான் ஒரு அதிசயத்தைக் கேட்டு ஜெபத்தை ஏறெடுத்தேன். அந்த விண்ணப்பத்திற்குப் பிறகு, அவள் வீட்டை விட்டு வெளியேறி வேலை தேடும்படிக்கு உணர்த்தப்பட்டதாக உணர்ந்தாள், இரண்டு வாரங்களுக்குள் ஒரு நகரத்தில் அவளுக்கு வேலை கிடைத்தது! இது உண்மையிலேயே ஒரு அதிசயம்! தினமும் இந்த ஊக்கமூட்டும் வார்த்தைகளை அனுப்புவதற்கு நீங்கள் மேற்கொள்ளும் உங்களது முயற்சிக்காக நன்றி.” (மார்த்தா)
