வெளியீட்டு தேதி 6 மே 2023

நாள் 6 : என்னைப் பின்தொடர்ந்து வா!

வெளியீட்டு தேதி 6 மே 2023

நான் எப்போதுமே சற்று விநோதமானவன் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். எனது உலகத்தை வேறு ஒருவருக்கு விவரிக்க வேண்டும் என்றால், அது எண்கள், வடிவங்கள் மற்றும் தர்க்கத்தைப் பற்றியது என்று கூறுவேன்.  சிறுவயதிலிருந்தே, கணிதத்திற்கான எனது திறமை தெளிவாகத் தெரிந்தது, மேலும் அந்தத் திறமை எனது பிராந்தியத்திற்கு வரி வசூலிப்பவனாக மாற எனக்கு உதவியது.

ஒருபுறம், என் பதவியில் நல்ல சம்பளம் வந்ததால், எனக்கு வசதியான வாழ்க்கை இருந்தது.  ஆனால் மறுபுறம், ரோமானிய அதிகாரிகளுக்கு வேலை செய்யும் ஒரு துரோகியாக கருதப்பட்டு நான் தொடர்ந்து யூதர்களால் நிராகரிக்கப்பட்டேன். எனது யூத சகோதரர்களின் கூற்றுப்படி, நான் அவர்களின் வாழ்க்கையை ஏற்கனவே இருந்ததை விட கடினமாக்கினேன்.  என் சக யூதர்கள் என்னை வெறுத்தார்கள், என் குடும்ப உறுப்பினர்கள் கூட என்னைப் புறக்கணித்து புறமுதுகு காட்டினர்.

நான் யாரையும் புண்படுத்த நினைக்கவில்லை என்பது ஆண்டவருக்குத் தெரியும். என் வேலையைச் சிறப்பாகச் செய்ய அதற்குரிய ஆவணங்களை ஒழுங்காக வைக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.  இப்படித்தான் நான் சீமோனையும் அவனுடைய சகோதரன் அந்திரேயாவையும் சந்தித்தேன்.  ரோமானியப் பேரரசுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை மிகவும் அதிகமாக இருந்தது. அன்றுவரை நான் பார்த்ததிலேயே மிக அதிகமான தொகை இதுதான்.

கப்பர்நகூமின் ரோமானிய அதிகாரியாகிய குயின்டஸ், சீமோனை சிறையில் அடைக்க விரும்பினார். ஆனால் சீமோன் ஏதோவொன்றில் ஈடுபட்டிருக்கிறாரா என்று பார்க்க முதலில் அவரை உளவு பார்க்கும்படி என்னிடம் கேட்டார். அன்று காலை கடற்கரையில் படகு நிரம்ப மீன்களுடன் இயேசு செய்த அற்புதத்தை நான் கண்டதும் அப்படித்தான்.

முதல்முறையாக என் வாழ்க்கையில், உலகத்தை வரையறுக்க எண்கள் சரியான அளவீடு இல்லை என்று உணர்ந்தேன்.  சாத்தியமில்லாத ஒன்றை நான் பார்த்தேன், என் அறிவிற்கு மட்டுப்படாத ஒன்று, அவற்றை எண்களால் விளக்கி மாளாது. 

ஒரு சில நாட்களுக்குப் பிறகு இயேசு திமிர்வாதக்காரனை சுகப்படுத்தி  நடக்க வைத்ததும் சாத்தியமற்ற ஒன்றே.  அந்த மனிதன் கூரை வழியாக இறக்கிவிடப்பட்டதையும், இயேசு எப்படி அவனை உடனடியாக குணப்படுத்தினார் என்பதையும் என் கண்களால் நான் பார்த்தேன்...

முன்னர் ஒழுங்குமுறையில் இருந்த என் உலகம் இப்போது வீழ்தலைக் கண்டது, எந்தப் பக்கம் திரும்புவது என்று தெரியவில்லை.  பின்னர் ஒரு நாள், இயேசு நான் பணிபுரிந்த வரி வசூல் சாவடியைக் கடந்து செல்லும்போது, என்னைப் பார்த்து, "அல்பேயுவின் மகனான மத்தேயுவே, என்னைப் பின்பற்றி வா!" என்றார் (மாற்கு 2:14 ஐத் தழுவியது).  மற்ற யூதர்களைப் போலல்லாமல், இயேசு என்னை நிராகரிக்கவில்லை;  மாறாக, அவர் என்னை தன்னுடன் சேரும்படி அழைத்தார்.

நான் ஒரு நொடி கூட தயங்கவில்லை.  நான் என் பதவியைத் துறந்து, என் மெய்க்காப்பாளராக இருந்த ரோமானிய காவலரிடம் சாவியை ஒப்படைத்து வெளியேறினேன். மேலும் என் வாழ்க்கையின் மிகப்பெரிய விசுவாசத்தின் அடியை எடுத்து வைத்தேன்: என்னை ஏற்றுக்கொண்டவரைப் பின்தொடர.  இப்போது என் வாழ்க்கை சீரானதிசையையும் நோக்கத்தையும் கொண்டதாயிற்று.

என் பெயர் மத்தேயு, அல்பேயுவின் மகன், நான் இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்டேன்.

குறிப்பு: அன்புள்ள நண்பரே, உன் வாழ்க்கை தெளிவான திசையில் செல்லாமல்  இருக்கலாம் அல்லது உன்னைத் தெரிந்தவர்கள் உன்னை நிராகரித்திருக்கலாம். உன்னை சுற்றியுள்ள அனைத்தும் வீழ்வதுபோல் தோன்றினாலும்,  நீ பின்பற்றக்கூடிய ஒருவர் உன்னுடனே இருக்கிறார்.  கிழக்கிலிருந்து வந்த ஞானிகளை நட்சத்திரம் வழிநடத்தியது போல, உன் அன்றாட வாழ்க்கையில் அவரைப் பின்பற்றவும், உன்னை வழிநடத்த அனுமதிக்கவும் இயேசு உன்னை அழைக்கிறார்.  அழைப்பை ஏற்பாயா?  அவரே உன் சிறந்த நண்பர்.

நீ ஒரு அதிசயமாக விளங்க தெரிந்துகொள்ளப்பட்டவர்!

Eric Célérier
எழுத்தாளர்