உங்கள் சந்தேகத்தின் வேளையில் இயேசு உங்களை சந்திப்பார்

"நான் மரிக்கும்போது, ஆண்டவர் என்பவர் ஒருவர் இல்லை என்பது தெரிந்தால் என்ன செய்வது?" இந்த எண்ணம் உங்கள் மனதில் எப்போதாவது தோன்றியிருக்கிறதா? நமது இரட்சிப்பு விசுவாசத்தை சார்ந்தது என்பதால், கிறிஸ்தவர்களாகிய நாம், இந்த சந்தேகங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, விசுவாசிக்க மட்டுமே வேண்டும் என்று கற்பிக்கப்பட்டுள்ளோம்: "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்." (யோவான் 3:16) ஆனால் அன்பரே, உங்களுக்குச் சொல்ல வேண்டிய ஒரு செய்தி என்னிடம் இருக்கிறது: விசுவாசம் என்பது சந்தேகமின்மை அல்ல; விசுவாசிப்பதற்கு சந்தேகமும் தேவைப்படுகிறது! இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள்: சந்தேகம் இல்லையென்றால், நமக்கு விசுவாசமும் இருக்க வேண்டிய அவசியமில்லை; நாம் நிச்சயத்தன்மையை மட்டுமே பெற்றிருப்போம். ஆண்டவரைக் காண முடியுமானால், அவரை விசுவாசிப்பதற்கு நமக்கு விசுவாசம் தேவைப்படாது. இயேசு கூட, சந்தேகப்பட்டவர்கள் மீது கோபப்படவில்லை. இந்த வாரம் நாம் பார்க்க இருக்கிற தலைப்பான, ஐந்தாவதும் இறுதியானதுமான 'உயிர்தெழுதலுடன் நேருக்கு நேர் - இயேசு உங்களை சந்திக்கும் ஐந்து இடங்கள்' என்ற தலைப்பின் கீழ், நாம் இதைக் கற்றுக்கொள்ளலாம் (யோவான் 20:24-29). இயேசு வீட்டினுள் இருந்த சீஷர்களுக்கு முதன்முதலில் தோன்றியபோது, தோமா அங்கு இல்லை. அவருடைய நண்பர்கள் என்ன நடந்தது என்று அவரிடம் சொன்னார்கள், ஆனால் தோமா உணர்ச்சிவசப்பட்டவராய் இவ்வாறு கூறினார்:“அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன்.” (யோவான் 20:25) தோமா பெரும்பாலும் “சந்தேகப்பேர்வழியான தோமா” என்று முத்திரை குத்தப்படுகிறார், ஆனால் அது நியாயமற்றது என்று நான் நினைக்கிறேன். நான் அவரை “தேடுகிற தோமா” என்று அழைக்க விரும்புகிறேன். அவர் சொல்வதென்னவென்றால்: “நீங்கள் சொல்வதை நான் அப்படியே நம்ப விரும்பவில்லை; நானே அவரை சந்திக்க வேண்டும்” என்பதாகும். சிலுவையில் அறையப்பட்டு மரித்த பிறகு ஒருவரால் மீண்டும் உயிர்பெற முடியும் என்ற அவரது நண்பர்களின் புத்திக்கெட்டாத கூற்றுகளை அவர் நிராகரிக்கவில்லை. அதற்கு பதிலாக, “நானே அதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்!” என்றுதான் அவர் கூறுகிறார். இயேசு வந்து, சந்தேகங்களுடன் இருந்த தோமாவை சந்திக்கிறார். அவர் தோமாவைப் பார்த்து இவ்வாறு கூறுகிறார்: “நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு.” (யோவான் 20:27) அன்பரே, உங்கள் இருதயத்தில் உள்ள சந்தேகங்கள் என்ன? தோமாவைப் போலவே, அவற்றை இயேசுவிடம் கொண்டு வாருங்கள் — அவர் உங்களைத் தள்ளிவிடமாட்டார். அதற்குப் பதிலாக, தம்மைத் தேடும்படி அவர் உங்களை அழைக்கிறார்: “கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.” (மத்தேயு 7:8)

