தேவன் தமது பரிபூரண திட்டத்தை நிறைவேற்ற குறையுள்ள மக்களைப் பயன்படுத்துகிறார்

நான் வழக்கமாக செல்லும் உடற்பயிற்சி மையத்தில், ஒரு நபரின் இதயத்துடிப்பைக் கண்காணிக்கும் திரையானது, கருவிக்கு மேலே உள்ள ஒரு திரையுடன் இணைக்கப்பட்டு, அந்த நபர் எத்தனை கலோரிகளை அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் எரிக்கிறார் என்பதை அவர்களுக்குக் காண்பிக்கும்படியான ஒரு அமைப்பு இருந்தது.
எனக்கு அடுத்த இயந்திரத்தில் யாராவது ஒருவர் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போதெல்லாம், என்னுடைய புள்ளிவிவரங்களை அவர்களுடைய புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது. அது என்னை மேலும் கடினமாக உழைக்கத் தூண்டும். குறிப்பாக அவர்கள் என்னை விட மிகவும் வயதானவர்களாக இருந்தால், நான் தொடர்ந்து செயல்பட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். இது பைத்தியகாரத்தனம் என்று சொல்லுங்கள், ஆனால் அவையே எனது சிறந்த உடற்பயிற்சி தருணங்களாக இருந்தன. 😂 ஒப்பீடு நம்மை உந்தித் தள்ளக்கூடும், இருப்பினும் அது நம்மை குறைத்து மதிப்பிட செய்யும். நாம் தோல்வியடைவதுபோல் உணரும் ஆபத்தான சிந்தனைகள் வரக்கூடும். இதேபோல நமது கிறிஸ்தவ வாழ்விலும், "அவர்கள் என்னை விட மிகவும் பரிசுத்தமானவர்கள்" அல்லது "அவர்களின் ஜெபங்கள் மிகவும் வல்லமை வாய்ந்தவை" என்று நினைக்க இது நம்மைத் தூண்டலாம்.
ஆனால் உண்மை இதுதான்:
"எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்." (ரோமர் 3:23-24)
இயேசுவின் சீஷர்கள் கூட சில சமயங்களில் இந்தக் குறிக்கோளைத் தவறவிட்டனர்:
- “தங்களுக்குள் யார் பெரியவன் என்று அவர்கள் வாதிட்டனர் (லூக்கா 22:24)
- அவர்கள் ஜெபிக்க வேண்டியிருந்தபோது தூங்கிவிட்டனர் (மத்தேயு 26:40-41)
- அவர்கள் விசுவாசத்தில் குறையுள்ளவர்களாக இருந்தனர் (மத்தேயு 8:26)
குறிப்பாக, சீமோன் பேதுரு நிறைய குழப்பங்களை ஏற்படுத்தினார். அவர் இயேசுவை மூன்று முறை மறுதலித்தார் (மத்தேயு 26:69-75), ஒரு கட்டத்தில், இயேசு அவரிடம் இவ்வாறு சொன்னார்:
"அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்." (மத்தேயு 16:23)
இவை அனைத்தையும் தாண்டி, பேதுரு தம்முடைய சபையைக் கட்டும் கன்மலையாக இருப்பார் என்று இயேசு கூறுகிறார் (மத்தேயு 16:18)
வேதாகமம் சீஷர்களின் குறைபாடுகளை மறைக்கவில்லை - அது அவர்களை வெளிப்படையாகக் காட்டுகிறது. ஏன்? ஆண்டவர் தமது பரிபூரண திட்டத்தை நிறைவேற்ற குறையுள்ள ஜனங்களைப் பயன்படுத்துகிறார் என்பதை நமக்கு நினைவூட்டுவதற்காகவே.
அன்பரே, இன்று உங்கள் நம்பிக்கையை இழக்காதீர்கள். நம்முடைய எல்லா குறைபாடுகளுக்கும் மத்தியில், ஆண்டவர் நம் மீது நம்பிக்கை வைப்பதைத் தெரிந்துகொண்டிருக்கிறார். குறிப்பாக நமது பெலவீனத்தில்தான் அவர் தம்மை வெளிப்படுத்துகிறார்.
இந்த உண்மை இன்று உங்களை ஆசீர்வதித்து ஆறுதல்படுத்தும் என்று நான் ஜெபிக்கிறேன்!

