நீர் எனக்குப் பலத்த துருகமும், எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும். சங்கீதம் 31:2

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்பதாக உணர வைக்கும் விஷயங்கள் ஏதேனும் உள்ளதா? பல விஷயங்கள் நமக்குப் பாதுகாப்பு உணர்வைத் தரக்கூடும். உதாரணமாக:
- குடும்பம்
- வேலை
- பணம்
- நண்பர்கள்
- திறன்கள் மற்றும் திறமைகள்
- ஊழியங்கள்
இவை ஆறுதலைத் தருகின்றன, ஆனால் இயேசு திகைப்பூட்டும் ஒன்றைச் சொல்கிறார்:
"யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்." (லூக்கா 14:26)
இந்த வார்த்தைகள் நமக்குக் கடுமையாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில், இது மிகுந்த அன்புடன் நமக்குக் கொடுக்கப்பட்டது. நம்மைச் சுற்றியுள்ள அனைவரையும் நாம் அப்படியே வெறுத்துவிட வேண்டும் என்று இயேசு சொல்லவில்லை, நாம் அவரை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறோம் என்பதுடன் ஒப்பிடும்போது, நாம் மற்றவர்களை ஒரு பொருட்டாக எண்ணாததுபோல் இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
இயேசுவுக்கு மட்டுமே நம் வாழ்வில் முதலிடம் கொடுக்க வேண்டும், மேலும் நமது பாதுகாப்பு பிரதானமாக அவருக்குள் காணப்பட வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, மற்ற அனைத்தும் நிலையற்றவை, இறுதியில் அவை நம்மைவிட்டுச் சென்றுவிடும். ஆனால் இயேசு என்றென்றும் நிலைத்திருப்பார். அவர் நித்தியமாய் நிலைத்திருக்கும் ஆண்டவர். அவரை விட பாதுகாப்பான ஒரு புகலிடத்தை, அடைக்கலத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதக்காரர் இதை எழுதினார்:
“உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாய் என்னைத் தப்புவியும்; நீர் எனக்குப் பலத்த துருகமும், எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும். என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும். அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; தேவரீரே எனக்கு அரண். உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்: சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர். வீண்மாயைகளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, கர்த்தரையே நம்பியிருக்கிறேன்.” (சங்கீதம் 31:2-6)
அன்பரே, இயேசு உங்கள் கன்மலையாகவும், உங்கள் வாழ்க்கைக்கு அடைக்கலமாகவும், உங்கள் இருதயத்திற்கு புகலிடமாகவும் இருக்கட்டும். அவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார்; அவருடைய தயவு உங்கள் பாதுகாப்புக்கான நிச்சயத்தை அளிக்கிறது.

