ஒரு உண்மையான சீஷன் சீஷர்களை உருவாக்குகிறான்

20 ஆண்டுகளுக்கும் மேலாக, இசை மூலம் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளும் யெஷுவா ஊழியங்கள் மூலம் உலகம் முழுவதும் பயணம் செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது. இந்த ஆராதனை ஊழியத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் நான் மிகவும் விரும்புகிறேன், ஆனாலும் ஜனங்களுக்கு ஒரு அற்புதமான ஆராதனை அனுபவத்தை வழங்குவதை விடவும், மேலான ஒன்றை நான் அவர்களுக்கு வழங்க எப்போதுமே ஏங்கி வருகிறேன். அவர்களை ஒரு முடிவில்லாத சீஷத்துவப் பயணத்தின் வழியாக அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.
அதனால்தான் Jesus.netன் 'அனுதினமும் ஒரு அதிசயம்' என்ற ஊழியத்தை இந்தியாவிற்குக் கொண்டுவர எங்களை அழைத்தபோது, ஜெனியும் நானும் மிகவும் உற்சாகமாக இருந்தோம்!
இயேசு நம்மை இவ்வாறு அழைக்கிறார்:
“நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.” (மாற்கு 16:15-16)
ஊழிய அழைப்பு நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதோடு நின்றுவிடுவதில்லை. நாம் "ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த" மட்டும் அழைக்கப்படவில்லை - சீஷர்களை உருவாக்கவும் அழைக்கப்பட்டுள்ளோம்:
"ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்." (மத்தேயு 28:19-20)
ஆண்டவர் உங்களை சீஷராக மாற்றியது மட்டுமல்லாமல், சீஷர்களை உருவாக்கும் திறனையும் உங்களுக்குக் கொடுத்தார்!
அன்பரே, ஒரு உண்மையான சீஷன் சீஷர்களை உருவாக்கும் நபராக இருக்கிறார்!
இயேசு நமக்கு முன்மாதிரியானவர். அவர் கூட்டங்கூட்டமாக மக்களுக்கு போதனை செய்தது உண்மைதான், ஆனாலும் அவர், குறிப்பாக 12 சீஷர்களை தேர்ந்தெடுத்து மூன்று ஆண்டுகளுக்கு மும்முரமாக பயிற்றுவித்தார். அதுமட்டுமின்றி, இவர்கள் சென்று மேலும் பல சீஷர்களைப் பயிற்றுவித்து உருவாக்குவதற்காகவும் அவர் பயிற்சி அளித்தார்!
இதைச் செய்யும்படியாகத்தான் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்: சீஷர்களை உருவாக்க வேண்டும், அவர்கள் சென்று இன்னும் அநேகரை சீஷர்களாக்க வேண்டும்! இதை நாம் எப்படி செய்வது?
இப்படிச் செய்வதால் நாம் சீஷர்களை உருவாக்கலாம்:
- விசுவாசத்தைக் கண்டறிய ஒரு நபருக்கு உதவுதல்
- ஒருவரின் வாழ்க்கை பயணத்தில் சேர்ந்து நடக்க நேரம் ஒதுக்குதல்
- நியாயந்தீர்க்காமல் செவிகொடுக்க நாடுதல்
- மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருத்தல்
- அதிகமாக ஜெபித்தல்.
நாம் ஆண்டவருடைய அன்பை மற்றவர்கள் மீது பொழிந்தருளும்போது, அது மற்றவர்கள் வாழ்விலும் பாய்கிறது, மேலும் அது நம் கற்பனைக்கு எட்டாத அளவுக்குப் பெருகும். இது ஆண்டவருடைய மகத்தான திட்டம், இது எல்லா நாடுகளையும் சீஷர்களாக்கும் இந்த அற்புதமான பயணத்தில் நம் ஒவ்வொருவரையும் உள்ளடக்கியுள்ளது.
நீங்கள் இந்த மின்னஞ்சலை யாருக்காவது அனுப்பும்போது அது அந்த நபருக்கு ஒரு சீஷத்துவ பயணத்தின் துவக்கமாக மாறலாம்… இதுபோன்ற சிறிய செயல்களால் வரும் விளைவுகள் ஒருவரின் சீஷத்துவ பயணத்தை துவங்க உதவும்.

