கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். ரோமர் 12:17-18

உங்களுக்கு நடிப்பு அரசிகள் (அல்லது அரசர்கள்) யாரையாவது தெரியுமா? சிலர் தாங்கள் செல்லும் இடமெல்லாம் நாடகத்தை அரங்கேற்றம் செய்வதுபோல் நடந்துகொள்கிறார்கள் - சண்டையைக் கிளப்பிவிடுவது, ஆப்புகளை வைப்பது மற்றும் எல்லாவற்றிற்காகவும் கோபப்படுவது என்பன போன்ற தேவையில்லாத சூழ்நிலைகளை உருவாக்குகிறார்கள். நம்மைச் சுற்றி அப்படிப்பட்ட ஜனங்கள் இருப்பது நம்மை சோர்வடையச் செய்கிறது. நாம் அவர்களைப்போல் இருக்கக் கூடாது என்று வேதாகமம் நம்மை ஊக்குவிக்கிறது:
"ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்." (ரோமர் 12:17-18)
கலாத்தியர் 5:22-23ல் பரிசுத்த ஆவியின் கனிகளில் ஒன்றாக சமாதானம் பட்டியலிடப்பட்டுள்ளது:
"ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்."
உங்கள் வாழ்க்கையில் ஆவியின் கனிகள் (அல்லது அதன் பற்றாக்குறை) குறிப்பாக மற்றவர்களுடனான உங்கள் உறவில் தெளிவாக வெளிப்படும். நீங்கள் தனியாக இருக்கும்வரை இவ்வுலகில் மிகவும் அன்பான, கனிவான மற்றும் பொறுமையான நபராக இருப்பது எளிது. அடக்கி ஆளுகிற பெற்றோர், எரிச்சலூட்டும் உடன்பிறப்பு அல்லது எதையாவது கேட்டுக்கொண்டே இருக்கும் மனைவி என அனைவரையும் நினைத்துக்கொள்ளுங்கள், அப்போது, அந்தக் கனிகளை வெளிப்படுத்துவது மிகவும் கடினம். 😤
நம் வாழ்வில் சமாதானம் எனும் கனியை எவ்வாறு தருவது? முதலாவதாக, மற்றவர்களுக்கு பொறுமையுடன் செவிகொடுக்கும் கோபமில்லாதா நபராக இருப்பதன் மூலம் தேவையில்லாத சண்டைகளில் இருந்து விலகியிருக்க வேண்டும்.
"ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்." (யாக்கோபு 1:19)
இரண்டாவதாக, மற்றவர்களுடன் உள்ள உறவு விரிசல்களை சரிசெய்வது எப்போதும் முன்னுரிமையாக இருக்க வேண்டும்:
"ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து." (மத்தேயு 5:23-24)
அன்பரே, உங்கள் வாழ்க்கையில் “சமாதானம்” எனும் கனி எவ்வளவு ஆரோக்கியமாக உள்ளது? விஷயங்களைச் சரிசெய்ய வேண்டிய நபர்கள் யாராவது உங்களுக்கு இருக்கிறார்களா? இதை உங்களுக்கு ஒரு நினைவூட்டலாக எடுத்துக்கொள்ளுங்கள்: காத்திருக்க வேண்டாம் – இன்றே அதைச் சரி செய்யுங்கள்!

