விசுவாசம் என்பது சந்தேகமின்மை அல்ல, சந்தேகங்களின் மத்தியிலும் ஆண்டவரை நம்புவதாகும்

இன்று, கிதியோனுக்கும் ஆண்டவருக்கும் இடையே நடந்த ஒரு வல்லமை வாய்ந்த உரையாடலைப் பார்ப்போம் - இது கிதியோனின் காதுகளில் (மற்றும் நம்முடைய காதுகளிலும்) எதிரி கிசுகிசுக்க முயற்சித்த மூன்று மிக முக்கியமான சந்தேகங்களை வெளிப்படுத்துகிறது:
1. ஆண்டவர் மீது சந்தேகம்
கர்த்தருடைய தூதன் தோன்றியபோது, கிதியோனின் முதல் பதில் இதுதான்:
“ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே?” (நியாயாதிபதிகள் 6:13)
இது உங்களுக்கும் பரிச்சயமானதாக இருக்கிறதா? விசுவாசிகள் மற்றும் அவிசுவாசிகள் ஆகிய இருவருமே, அடிக்கடி கேட்கும் கேள்விகளில் ஒன்று எதுவென்றால்: “ஆண்டவர் இருந்தால், ஏன் கெட்ட காரியங்கள் நடக்கின்றன?” என்பதுதான்.
சத்துருவானவன் அந்தப் பாதைக்கு நேராக உங்கள் எண்ணங்களை இழுத்துச் செல்ல இடங்கொடாதீர்கள். நம் வாழ்வில் சில வேதனையான காரியங்கள் நடக்க ஆண்டவர் ஏன் அனுமதிக்கிறார் அல்லது அனுமதிப்பதில்லை என்பதை புரிந்துகொள்வது நம் அறிவுக்கு மிகவும் அப்பாற்பட்ட ஒன்று (யோபு 42:3).
கிதியோனின் சந்தேகத்திற்கு ஆண்டவர் எவ்வாறு பதிலளிக்கிறார்? "நீ போய் அந்தக் காரியத்தில் ஏதாவது செய்!" என்பதாக அவர் சொல்கிறார் (நியாயாதிபதிகள் 6:14). நம் துன்பங்களுக்கு பெரும்பாலும் ஆண்டவருடைய பதிலாக இருப்பது நாம்தான் - நாம்தான் இவ்வுலகில் ஆண்டவருடைய கைகள் மற்றும் கால்களாக செயல்பட வேண்டும். நம் பிரச்சனைகளிலிருந்து நமக்கு உடனடியாக மீட்பை வழங்குவதற்கு அவர் முற்றிலும் திறமையானவராக இருக்கிறார், ஆனாலும் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும், நாமே தீர்வாக இருக்க வேண்டும் என்றும் அவர் சொல்கிறார்.
2. தன் மீது சந்தேகம்
ஆண்டவர் நன்மை செய்பவர் என்பதை சந்தேகிக்க வைக்க பிசாசால் முடியாவிட்டால், அவன் நம் மீது நாமே சந்தேகிக்கும்படி செய்துவிடுவான். நேற்று நாம் பார்த்ததுபோல், கிதியோன் தன்னை பலவீனமான நபராகவும் முக்கியமற்ற நபராகவும் நினைக்கிறார். ஆண்டவருடைய பிரசன்னம் நம்முடன் இருக்கும்போது, நமது தகுதிகள் ஒரு பொருட்டல்ல என்பதை ஆண்டவர் அவருக்கு நினைவூட்டுகிறார் (நியாயாதிபதிகள் 6:15-16).
3. அழைப்பின் மீது சந்தேகம்
கிதியோன் வெளிப்படுத்திய இறுதி சந்தேகம் இதுதான்:
"என்னோடே பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டும்." (நியாயாதிபதிகள் 6:17).
நாம் முழுமையாக செயல்படுவதைத் தடுப்பதற்காக சாத்தான் செய்யும் கடைசி முயற்சி, உண்மையில் ஆண்டவர் நம்மை அழைக்கவில்லை என்பதாக நம்மை நம்ப வைப்பதாகும். ஆண்டவர் அவர்களை வழிநடத்தும்போது, அவருக்குச் செவிசாய்த்து, அவரைப் பின்பற்றாத, செயலற்ற கிறிஸ்தவர்களையே சாத்தான் விரும்புகிறான்.
கிதியோன் உறுதியாக இருக்க ஆண்டவரிடத்தில் ஒரு அடையாளத்தைக் கேட்கிறார், அன்பரே, ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டதைக் குறித்து நீங்கள் எப்போதாவது நிச்சயமற்றவர்களாக இருந்தால், நீங்களும் அவ்வாறு உறுதி கேட்கலாம்!
நமக்கு சந்தேகங்கள் ஏற்படும்போது, ஆண்டவர் மிகவும் பொறுமையாக இருக்கிறார் என்பதை கிதியோனின் கதையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.
கிதியோனுக்கு அவ்வளவு சந்தேகங்கள் இருந்தபோதிலும், எபிரெயர் 11ல் விசுவாச வீரர்கள் பட்டியலில் அவர் இடம்பெற்றுள்ளார்.
நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்; மீண்டும் மீண்டும் சொல்வேன்: விசுவாசம் என்பது சந்தேகமின்மை அல்ல; சந்தேகங்களின் மத்தியிலும் ஆண்டவரை நம்புவதாகும்.

