ஆண்டவர் நமக்குள் மறைந்திருக்கும் மிகப்பெரிய ஆற்றல்களை வைத்தே நம்மை வரையறுக்கிறார்

நீங்கள் எப்படிப் பார்க்கப்பட விரும்புகிறீர்கள்?
நாம் அதிர்ஷ்டசாலிகளானால், ஜனங்கள் நம்மை நமது மிகப்பெரிய சாதனைகள் அல்லது சிறந்த குணங்களைக் குறிப்பிட்டு வரையறுக்கிறார்கள்.
பொதுவாக நான் அறிமுகப்படுத்தப்படும் விதங்கள் :🎤 “ஒரு பிரபலமான ஹிந்தி ஆராதனை தலைவர்”🎶 “‘ஹம் காயே ஹோசன்னா’ பாடலை எழுதியவர்”❤️ “ஜெனியின் கணவர்”👶 “ஜாக்கின்(Zac) அப்பா” என்று சூழலைப் பொறுத்து, நான் அறிமுகப்படுத்தப்படுகிறேன்.
ஆனால் சில நேரங்களில், சமுதாயம், நமது மிகப்பெரிய போராட்டம், மோசமான தோல்வி அல்லது நமக்கிருக்கும் குறைகள் ஆகியவற்றின் மூலமே நம்மை வரையறுப்பதை தேர்வு செய்கிறது.நீங்கள் இப்படிப்பட்ட பட்டங்களைக் கேட்டிருக்கலாம்:
- “குட்டையான அந்தப் பையன்”
- “பணிநீக்கம் செய்யப்பட்ட அந்தப் பெண்”
- “சத்தம் போடும் அந்தக் குழந்தை”
ஆனால் ஆண்டவர், இப்படியில்லாமல் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் நம்மை சந்திப்பதைத் தேர்ந்தெடுக்கிறார். ஆண்டவர் நமது கடந்த காலத்தையோ நிகழ்காலத்தையோ பார்ப்பதில்லை, மாறாக நமக்குள் மறைந்திருக்கும் ஆற்றல்களின் வாயிலாக நம்மைப் பார்க்கிறார்.
ஆண்டவர் கிதியோனை அழைத்தபோது, அவர் சொன்ன முதல் விஷயம் இதுதான்:
“பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.” (நியாயாதிபதிகள் 6:12)
கதையின் அந்தக் கட்டத்தில், கிதியோன் ஒரு பலமுள்ள போர்வீரனாக இருக்கவில்லை (அப்போதுவரை). அவரது மனம் சந்தேகங்களாலும் பயங்களாலும் நிறைந்திருந்தது. தனது சொந்த ஜனங்களின் மேல் இருந்த பயத்தினால், நகரத்தின் சிலைகளைத் தகர்க்க வேண்டும் என்ற கர்த்தரின் கட்டளையை, யாரும் பார்க்காதபோது, நடுராத்திரியில், ரகசியமாக நிறைவேற்றினார். இந்த செயல் ஒரு பெரிய போர் வீரன் செய்யும் செயல் போல தோன்றவில்லை!
ஆனாலும், ஆண்டவர் அவரை அப்படித்தான் பார்க்கிறார்: பராக்கிரமசாலியான போர்வீரனாக இருக்க பிறந்தவன் என்றே ஆண்டவர் அவரைப் பார்த்தார்.
அன்பரே, இது உங்களுக்கும் பொருந்தும்; ஆண்டவர் உங்களைப் பார்க்கும்போது, அவர் உங்கள் பாவங்களையோ, குறைபாடுகளையோ அல்லது தோல்விகளையோ பார்ப்பதில்லை, மாறாக உங்களை குறையில்லாத ஒரு படைப்பாக, அவருடைய சொந்த சாயலாகப் பார்க்கிறார்! நீங்கள் அவருடைய பார்வையில் பரிசுத்தமாகவும், பரிபூரணமாகவும் இருக்கிறீர்கள்!
"... உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன்நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்." (கொலோசெயர் 1:21)
அன்பரே, ஆண்டவர் உங்களைப் பார்ப்பதைப் போலவே, ஒரு நோக்கத்துடன் கூடிய ஒரு நபராக, மதிப்புமிக்க ஒரு நபராக, ஆற்றல் நிறைந்த ஒரு நபராக நீங்களும் உங்களைக் காண இன்று நான் உங்களுக்குச் சவால் விடுகிறேன்.

