வெற்றியானாலும் தோல்வியானாலும் ஆண்டவரை பற்றிக்கொள்ளுங்கள்

வேதாகமத்தில் என்னை எப்போதும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஒரு விஷயம் என்னவென்றால், வேதாகமத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் எவ்வளவு ஆச்சரியப்படத்தக்க மனிதர்கள் என்பதுதான். நமக்குப் பிடித்த கதைகளை வாசிக்கும்போது, அவை வெறும் இதிகாச போர்களையும் வெற்றிகளையும் பற்றிய கதைகளாக மட்டும் இருப்பதில்லை, அதனோடு கூட, நம் விசுவாச வீரர்கள் அனுபவித்த தனிப்பட்ட வாழ்வின் மாற்றங்களையும் நாம் காண்கிறோம்.
கிதியோனின் கதையில், முதலில் அவன், தனது அழைப்பையும் ஆண்டவருடைய வாக்குத்தத்தங்களையும் தொடர்ந்து சந்தேகிக்கும் ஒரு நபராக, தன்னைத்தானே குறைத்து மதிப்பிட்ட, நம்பிக்கையற்ற ஒரு இளைஞனாக இருந்தான் என்பதை நாம் கவனிக்கிறோம். நகரத்தின் சிலைகளைத் தகர்க்க வேண்டும் என்ற ஆண்டவருடைய கட்டளையை நிறைவேற்றும்போது, சண்டையைத் தவிர்க்கும்படி, இரவில் இரகசியமாக அதைச் செய்து முடித்ததால், அவன் ஜனங்களைப் பிரியப்படுத்துபவனாய் இருந்தான். (நியாயாதிபதிகள் 6).
காலப்போக்கில், கிதியோன் ஒரு துணிச்சலான இராணுவத் தளபதியாக மாறுவதை நாம் காண்கிறோம், 300 வீரர்கள் கொண்ட குழுவை எண்ணற்ற எதிரிப் படையை எதிர்க்கும்படி, வெற்றியின் பாதைக்கு நேராக அழைத்துச் செல்கிறார் (நியாயாதிபதிகள் 7). கோபத்தோடு வந்த எப்பிராயீமியர்களை எதிர்கொண்டபோது, அவர் சண்டையைத் தீர்த்து வைக்கும் ஒரு சிறந்த நபருக்கான திறன்களையும் வெளிப்படுத்தினார் (நியாயாதிபதிகள் 8:1-3)
மேலும் இஸ்ரவேலர்கள் தங்கள் மீது ராஜாவாக ஆளுகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கிதியோன் நிராகரித்தபோது, மிகுந்த மனத்தாழ்மையையும் காட்டினார், ஆண்டவர் மட்டுமே அவர்களை ஆளுகை செய்பவர் என்பதை அவர்களுக்கு நினைவூட்டினார் (நியாயாதிபதிகள் 8:23).
இருப்பினும், கிதியோனின் மனுஷீக பக்கம் மற்றும் குறையுள்ள பக்கத்தை மீண்டும் ஒருமுறை காணலாம், அவர் தனது கொள்ளையிலிருந்து பெற்ற, கொள்ளைப் பொருட்களைப் பயன்படுத்தி ஒரு ஏபோத்தை உருவாக்குகிறார், பின் நாட்களில் அது ஒரு விக்கிரகமாக மாறுகிறது (நியாயாதிபதிகள் 8:27). தனது தந்தையின் சிலைகளை இடித்து தனது வாழ்க்கையை “தொடங்கிய” மனிதன் இறுதியில் தானே ஒன்றை உருவாக்கிவிடுகிறான்!
தாவீது ராஜா, மோசே மற்றும் பலரின் கதைகளைப் போலவே கிதியோனின் கதையும் காணப்படுகிறது, ஆண்டவர் ஒருவரை எவ்வளவு வல்லமையாகப் பயன்படுத்தினாலும், நம்மில் யாரும் மனுஷீக தோல்விக்கு விதிவிலக்கானவர்கள் அல்ல என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது. நாம் எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களானோம் (ரோமர் 3:23). மேலும் சோதனை ஒவ்வொரு மூலையிலும் பதுங்கியிருக்கிறது.
அதனால்தான் இது மிகவும் முக்கியமானது:
- வெற்றிகளிலும் தோல்விகளிலும் ஒரே மாதிரியாக ஆண்டவருக்கு அருகில் இருங்கள்
- நீங்கள் தவிர்க்க முடியாதபடி ஒரு தவறை செய்யும்போது, அவரை விட்டு விலகிச் செல்லாமல், அவரை நோக்கி ஓடுங்கள்.
- ஆண்டவர் மீது மட்டும் உங்கள் நம்பிக்கையை வையுங்கள் - ஜனங்கள் மீது அல்ல, அவர்கள் எவ்வளவு அதிகமாக தெய்வீகமானவர்களாக, ஆவிக்குரியவர்களாக அல்லது வல்லமை வாய்ந்தவர்களாக தோன்றினாலும் சரி, அவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம்.
இன்று, “உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே என்னையும் அழைத்து செல்லும்” என்ற இந்தப் பாடல் உங்களை ஊக்குவிக்கட்டும்.

