ஆண்டவருடைய கரம் உதாரத்துவமானது

ஒரு தந்தையின் கரத்தில் பல விஷயங்கள் இருக்கலாம்: ஆறுதல்படுத்துதல், ஒழுங்குபடுத்துதல், வழிநடத்துதல், தாங்குதல் மற்றும் பாதுகாத்தல். இந்த வாரம் நாம் கற்றுக்கொண்டதுபோல, ஆண்டவருடைய கரம் இதையெல்லாம் செய்கிறது மற்றும் இன்னும் பலவற்றையும் செய்கிறது.
இன்று, நாம் மற்றொரு அம்சத்தை ஆராய்வோம்: ஆண்டவருடைய உதாரத்துவமான கரம்.
"நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்." (சங்கீதம் 145:16)
ஆண்டவருடைய கரத்திலிருந்து வரும் அனைத்தும் இலவசமாகவும், ஏராளமாகவும், தயக்கமின்றியும் கொடுக்கப்படுகின்றன. ஆண்டவர் கஞ்சத்தனமானவர் அல்ல!
யோசித்துப் பாருங்கள் - அவர் வானத்திலிருந்து மன்னாவைப் பொழிந்தருளினபோதும் (யாத்திராகமம் 16), ஐந்து அப்பங்களாலும் இரண்டு மீன்களாலும் 5000 பேரை போஷித்தபோதும் (மத்தேயு 14) தேவதூதரின் சேனைகளால் எலிசாவை சூழ்ந்தபோதும் (II இராஜாக்கள் 6), ஆண்டவர் எப்போதும் போதுமானதை விட அதிகமாக வழங்கியிருக்கிறார்.
ஆண்டவருடைய கைகள் திறந்திருக்கிறது, இறுக்கமாக மூடியிருக்கவில்லை.
தாவீது ராஜா இதை நன்கு புரிந்துகொண்டார். 1 நாளாகமம் 29ல், தேவாலயத்துக்கான பொருட்களைச் சேகரித்தபோது, அவர் இதை ஒப்புக்கொண்டார்:
"ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்." (1 நாளாகமம் 29:12)
தன்னுடைய சொந்தத் திறனைப் பற்றிப் பெருமை பேசுவதற்குப் பதிலாக, ஆண்டவருடைய அபரிமிதமான உதாரத்துவ மனப்பான்மைக்காக தாவீது அவரைத் துதித்தார்.
தாவீது ஒரு வல்லமை வாய்ந்த சத்தியத்தை உணர்ந்துகொண்டார்: நம்மிடம் உள்ளதை நாம் சம்பாதிக்கவில்லை - நாம் ஆண்டவருடைய ஆசீர்வாதங்களின் நிர்வாகிகளாக மட்டுமே இருக்கிறோம்.
அன்பரே, நீங்கள் எப்போதாவது ஆண்டவருடைய வழங்கலை சந்தேகித்தால், இதை நினைவில்கொள்ளுங்கள் - அவர் எப்போதும் உண்மையுள்ளவராக இருந்து வருகிறார். ஏற்ற நேரத்தில் உங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்யும்படி, அவருடைய கரம் இன்னும் உங்களுக்காகத் திறந்திருக்கிறது.
இன்று, அவருடைய உதாரத்துவ மனப்பான்மையைப் பற்றி சிந்திக்க நான் உங்களை ஊக்குவிக்கிறேன். தயவின் மூலமாகவோ, உங்கள் ஆஸ்திகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலமாகவோ அல்லது ஊக்கமளிப்பதன் மூலமாகவோ, இந்த வாரம் வேறொருவருக்கு ஆண்டவருடைய திறந்த கரத்தை நீட்ட ஒரு வழியைக் கண்டறியுங்கள்.
இன்று நீங்கள் உதாரத்துவமாக இருப்பதற்கான ஒரு வழி எது? அதை எழுதி வைத்துக்கொண்டு செயல்படுங்கள்!

