என் நண்பனே / தோழியே

உங்களுடன் பழகுபவர்களுக்கு நீங்கள் ஒரு நல்ல நண்பனாக/தோழியாக இருக்கிறீர்களா? அல்லது ஒரு கெட்ட நண்பனாக/தோழியாக இருக்கிறீர்களா? நல்ல நண்பர்களைப் பெறுவது என்பது மிகவும் மதிப்புமிக்க ஒன்று, நல்ல நண்பர்களைப் பெற வேண்டுமானால், நீங்களும் மற்றவருக்கு ஒரு நல்ல நண்பராக இருக்க வேண்டும். நல்ல நண்பன்/தோழி என்றால் என்ன?
யோபு புத்தகம் அதைப் பற்றிய சிறந்த போதனையை நமக்குத் தருகிறது. ஆரம்பத்தில், யோபுவை நலம் விசாரிக்க வந்த அவனது மூன்று சிநேகிதர்களும் நன்றாகப் பேசத் தொடங்கினர். அவர்கள் அவருடைய கஷ்டங்களைப் பற்றிக் கேள்விப்பட்டபோது அவரைப் பார்க்கப் புறப்பட்டு வந்து, அனுதாபப்பட்டு அவருக்கு ஆறுதல் அளித்ததை நாம் காண்கிறோம். அவருடைய துயரத்தைக் கண்டு, அவர்கள் ஏழு நாள் இரவும் பகலும் ஒரு வார்த்தை கூட பேசாமல் அவருடன் சேர்ந்து அழுது புலம்பினர். (யோபு 2:11-13)
ரோமர் 12:15ல், 'அழுகிறவர்களுடனே அழுங்கள்' என்று சொல்லப்பட்டுள்ளது. யோபுவின் நண்பர்கள் ஆரம்பத்தில் இதைத்தான் செய்தார்கள்.
உங்கள் நண்பர்கள் கஷ்டப்படும் போது, நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயம் என்னவென்றால், அவர்களது தோள் மீது உங்கள் கையை வைத்து, அவர்களை அணைத்து, அவர்களின் துன்பத்தை உங்கள் சொந்த துன்பத்தைப்போல எண்ணி அதில் பங்கேற்பதுதான்.
அவர்களது துன்ப நேரத்தில் நீங்கள் தவிர்க்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், யோபுவின் நண்பர்கள் அடுத்து செய்த காரியம்தான்; அப்படி என்ன செய்தனர்? யோபுவின் துன்பத்தை ஆராய்ந்து, அது அவருடைய பாவத்தினால் வந்த விளைவு என்று நினைத்தனர். அவர்கள் தொடர்ந்து அப்படிப் பேசிக்கொண்டிருந்தபோது, யோபு அவர்கள் மீது விரக்தி அடைகிறார், மேலும் ஆண்டவரும் அவர்கள் மீது விரக்தி அடைகிறார்! இறுதியில், ஆண்டவர் யோபுவின் நண்பர்களைப் பார்த்து, “உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை" என்று கூறினார் (யோபு 42:7)
நீங்கள் ஒரு நண்பருக்கு அறிவுரை கூறும்போது, சரியான காரியத்தைச் சொல்லும்படி ஞானத்திற்காக ஆண்டவரிடத்தில் ஜெபம்பண்ணுங்கள், மேலும் உங்கள் வார்த்தைகள் மூலமாகவும் உங்கள் செயல்கள் மூலமாகவும் ஆண்டவருடைய நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்துவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். ஆண்டவருடைய மகத்துவத்தையும், அவர்கள் வாழ்விலும் உங்களுடைய வாழ்விலும் ஆண்டவர் செய்த அனைத்து அற்புதமான காரியங்களையும் அவர்களுக்கு ஞாபகப்படுத்தி, அவர்களை ஊக்கப்படுத்தும் நபராய் இருங்கள்!
அன்பரே, இன்று ஊக்கம் தேவைப்படும் நண்பர் ஒருவர் உங்கள் ஞாபகத்துக்கு வருகிறாரா? ஒரு நல்ல நண்பனாக/தோழியாக இருப்பதற்கான ஒரு வழி உண்டு, அவர்களுக்காக ஜெபிப்பதும், அவர்களின் அனுமதியுடன், இந்த மின்னஞ்சல் பட்டியலில் அவர்கள் பெயரைப் பதிவு செய்வதுமே அந்த நல்ல வழி. இதனால், அவர்களும் அதிசயம் மின்னஞ்சல் மூலம் தினமும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

