தமது அன்பில் ஆண்டவர் வல்லமையுள்ளவர்
இந்த வாரம் முழுவதும், ஆண்டவரது வல்லமையின் பல அம்சங்களை நாம் ஆராய்ந்து பார்த்தோம். கடைசி நாளன்று சிறந்த ஒன்றை தியானிக்கும்படி கொண்டுவந்துள்ளேன்: அதுதான் ஆண்டவரின் வல்லமை வாய்ந்த அன்பு ❤️🔥
ஆண்டவரின் அன்பு மரணத்தைக்கூட ஜெயிக்கும் அளவுக்கு வல்லமை வாய்ந்தது! இயேசு நம் மீதுள்ள அன்பினால் தமது ஜீவனைக் கொடுத்து மீண்டும் உயிர்த்தெழுந்தார், பாவம் மற்றும் மரணத்தின் கட்டுகளை உடைத்தெறிந்தார்.
“அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்குகிறோம்.” (1 யோவான் 3:16)
அவர் நமக்காக பலியானதால், நம்மை விடுவிக்க வல்ல இப்படிப்பட்ட அன்பை நாம் இப்போது அறிந்துகொள்ளலாம் (ரோமர் 6:6-11)!
ஆண்டவரின் அன்பு நம்மை விடுவிப்பது மட்டுமல்ல; அது நம்மில் மாற்றத்தையும் உண்டாக்குகிறது. இது எனக்குப் பிடித்த மேற்கோள்களில் ஒன்று:
"நீங்கள் இருக்கிற வண்ணமாகவே ஆண்டவர் உங்களை நேசிக்கிறார், உங்களது வழியில் நீங்கள் செல்ல அனுமதிக்கும் அளவிற்கு உங்களை நேசிக்கிறார்”_ Max Lucado
ஆண்டவரின் அன்பு வல்லமை வாய்ந்தது, அது நம்மை அதிக வல்லமை வாய்ந்த நபராக மாற்றுகிறது. நம்மைக் கட்டாயப்படுத்தும் ஒரு வழியில் அல்ல, நம்மை நிதானமாக நடத்தி, புரிந்துகொள்ளத்தக்க வழிகளில் நம் குணத்தை மாற்றுகிறது:
“அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது;அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது.அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது,சினமடையாது, தீங்கு நினையாது,அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.அன்பு ஒருக்காலும் ஒழியாது.” (1 கொரிந்தியர் 13:4-8)
அத்தகைய பரிபூரண அன்பை நீங்கள் கொண்டிருந்தால் எவ்வளவு பலம்வாய்ந்த நபராக இருப்பீர்கள் என்பதை உங்களில் கற்பனை செய்ய முடிகிறதா? அது அடையக் கூடிய தூரத்தில்தான் உள்ளது! ஆண்டவர் தம்முடைய அன்பினால் உங்களை மாற்றியமைத்து உங்களை மேலும் அவரைப்போல் ஆக்க விரும்புகிறார்.
தைரியமாக ஒரு முயற்சி செய்வோம்: 1 கொரிந்தியர் 13ஆம் அத்தியாயத்தில் உள்ள அந்த வசனங்களை மீண்டும் வாசியுங்கள், ஆனால் ‘அன்பு’ என்று எழுதப்படுள்ள இடத்தில், 'அன்பு' என்று வாசிப்பதற்கு பதிலாக உங்கள் பெயரை சொல்லி வாசியுங்கள்: “_____ பொறுமைசாலி, _____ அன்பானவர், என்று சொல்லி வாசியுங்கள்…”
அப்படி வாசிக்கையில் நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்? நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறாரோ, அப்படிப்பட்ட ஒரு நபரைத்தான் நீங்கள் விவரித்தீர்கள், நீங்கள் அவருக்கு இடங்கொடுத்தால் அவர் உங்களுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார். அவருடைய அன்பைப் பெற்றுக்கொண்டே இருங்கள்! ❤️🔥
