பிடிவாதமாக மதியீனத்தைப் பற்றிக்கொள்ளாதீர்கள்!
நான் மனம் திறந்து ஒரு உண்மையைச் சொல்லப்போகிறேன்: ஒரு வகையில் சொல்லப்போனால், நான் ஒரு பரிபூரணவாதி, நான் விரும்புகிறபடி காரியங்கள் நடந்தால் எனக்குப் பிடிக்கும். நீங்கள் யாராவது இதேபோல் உணர்கிறீர்களா? 🙋🏻♂️
ஆனால், என்னுடைய வலுவான விருப்பங்களை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளும்போது, குறிப்பாக ஆண்டவரைப் பின்பற்றும் விஷயத்தில் அப்படி செய்யும்போது, அதுவே ஒரு தடையாக மாறும் என்பதை நான் காலப்போக்கில் அறித்துகொண்டேன்.
மிகவும் பிடிவாதமான நபராக மாறக்கூடாது என்பதை நீதிமொழிகள் நமக்கு நினைவூட்டுகின்றன:
மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன். (நீதிமொழிகள் 12:15)
சில நேரங்களில், நாம் "சரியானது" என்று நம்பும் விஷயங்களை விட்டுவிடுவதே ஞானம்.
நமது விருப்பங்களை அர்ப்பணித்து விட்டுக்கொடுக்கக் கூடியவர்களாய் நாம் இருக்க வேண்டும். குறிப்பாக, ஆண்டவருடனான நமது உறவில் இது ஒரு உகந்த உண்மையாகவே இருக்கிறது. தமது சிறப்பான திட்டங்களை என் வாழ்வில் செயல்படுத்தும்படி, ஆண்டவர் எத்தனை முறை எனது சொந்த திட்டங்களை "கலைத்துப்போட்டார்" என்பதற்குக் கணக்கே இல்லை.
உங்களுக்கு எப்போதாவது இப்படி நடந்திருக்கிறதா?
அதிர்ஷ்டவசமாக, ஆண்டவருடைய திட்டத்திற்கு இடமளிக்கும்படி, தங்களது விருப்பங்களை விட்டுக்கொடுக்க ஆயத்தமாக இருந்த மக்களுடன் ஒப்பிடும்போது, நாம் சிறந்த இடத்தில் தான் உள்ளோம்:
- ஒரு அடிமையாக விற்கப்படுவதையோ அல்லது சிறைச்சாலைக்குள் தள்ளப்படுவதையோ யோசேப்பு விரும்பாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஆண்டவர் தேசங்கள் அனைத்தையும் பஞ்சத்திலிருந்து காப்பாற்ற, அந்த கஷ்டங்களின் வழியாக நடத்திச் சென்ற பின்னரே, அவரை நிலைநிறுத்தினார். (ஆதியாகமம் 37-50)
- மரியாள், தான் திருமணத்திற்குப் பிறகு கர்ப்பவதியாகியிருந்தால் நலமாக இருக்கும் என்றும், மாட்டுத்தொழுவத்திற்குப் பதிலாக, ஒரு நல்ல வசதியான பஞ்சு மெத்தையில் குழந்தை பெற்றெடுப்பதையே விரும்பியிருப்பாள் என்று நான் நினைக்கிறேன். ஆனாலும், அவள் மேசியாவுக்கு தாயானாள், பூர்வகால தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினாள். (லூக்கா 1-2)
- யோனாவுக்கு நினிவே பட்டணத்துக்குச் செல்ல கொஞ்சம் கூட விருப்பம் இல்லை; உண்மையைச் சொல்லப்போனால், அவர் வேகமாக வேறு வழியில் ஓடினார்! ஆனால் ஆண்டவர் அவரைப் பயன்படுத்தி ஒரு முழு நகரத்தையும் மனந்திரும்பச் செய்தார், இது வரலாற்றிலேயே ஒரு மிகப்பெரிய எழுப்புதலாக இருக்கக்கூடிய ஒரு நிகழ்வாக இருந்தது (யோனா 1-4)
இவை அனைத்தும் சிறிய உதாரணங்களே.
ஆனாலும், ஏதோ ஒரு காரணத்தால், நமக்கு வசதியாக இருக்கும் இடத்திற்கு வெளியேதான் ஆண்டவர் கிரியை செய்ய தேர்ந்துகொள்கிறார்.
உங்கள் இதயத்தில் ஆண்டவர் உங்களை அர்ப்பணிக்கச் சொல்லும் விருப்பங்கள், திட்டங்கள், கனவுகள் அல்லது ஆசைகள் ஏதேனும் உள்ளதா என்று அவரிடம் கேட்கும்படி இன்று சற்று நேரம் ஒதுக்குங்கள். ஆண்டவருடைய வழி எப்போதும் சிறந்தது, எனவே அவரை நம்புங்கள்!
