திருப்பிப் போடு
இந்த உலகம் ஆதாரங்களை எதிர்பார்க்கிறது. அதனால், ஒரு விஷயத்தை நேரடியாகப் பார்த்தால் மட்டுமே நம்ப முடியும் என்று நினைப்பது இயல்பானது. ஆனால் இயேசுவை நம்புபவர்களுக்கு, 'பார்த்தால் மட்டுமே நம்பமுடியும்' என்பது ஒரு தவறான சிந்தனை. இந்தச் சிந்தனையை மாற்றுவதற்கான நேரம் இது. 🔄
நாம் எதையாவது அல்லது யாரையாவது நம்புவதற்கு முன், கண்ணுக்குத் தெரியும் அறிகுறிகளையும், உடனடி பதில்களையும், உறுதியளிக்கும் நம்பிகையையும் எதிர்பார்க்கிறோம். இயேசுவின் சீடர்களில் ஒருவரான தோமாவும் இப்படித்தான் உணர்ந்தார். உயிர்த்தெழுந்த இயேசுவை நேரில் பார்த்தால் மட்டுமே அவர் நம்ப முடியும் என்று நினைத்தார்.
இயேசுவும் தனது கிருபையால் தோமாவின் விருப்பத்தை நிறைவேற்றினார். ஆனால் அதன் பிறகு, தோமாவுக்கும், அவருக்குப் பிறகு வரப்போகும் எல்லா விசுவாசிகளுக்கும் ஒரு வலிமையான உண்மையைக் கூறினார்:
"காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்" – யோவான் 20:29.
அற்புதங்களையும், அடையாளங்களையும், அதிசயத்தினாலும் முக்கியப்படுத்தும் தேவாலயங்கள் மற்றும் போதகர்களின்பால் பல விசுவாசிகள் ஈர்க்கப்படுவதை நான் காண்கிறேன். இது புரிந்துகொள்ளக்கூடியதுதான், ஏனென்றால் நாம் விரும்புவதைச் செய்யும் ஒரு தேவனை நம்புவது எளிது.
ஆனால், இந்த அணுகுமுறை உண்மையான விசுவாசத்தின் இலக்கைத் தவறவிடுகிறது. உண்மையான விசுவாசம் என்பது, கண்ணுக்குத் தெரியும் எந்த ஒரு ஆதாரமும் இல்லாதபோதும், தேவனுடைய வாக்குறுதிகளை உறுதியாகப் பற்றிக்கொள்வதாகும்.
விசுவாசம் என்பது:
- வாழ்க்கை நியாயமற்றதாகத் தோன்றும்போதும் அவரது நன்மையை நம்புவது,
- அவர் தொலைவில் இருப்பதாக உணரும்போதும் அவரது பிரசன்னத்தை நம்புவது,
- சூழ்நிலைகள் மாறாததுபோல் தோன்றும்போதும் அவரது வல்லமையை நம்புவது.
பார்க்காமல் நம்புவது சாத்தியமானது மட்டுமல்ல, அது ஆசீர்வதிக்கப்பட்டதும் என்று இயேசு கூறுகிறார்.
தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறவர்கள் மீது ஒரு விசேஷித்த கிருபை பொழியப்படுகிறது. எதுவும் இல்லாத அமைதியான தருணத்திலும், காத்திருக்கும் வேளையிலும் நீங்கள் தேவன்மீது வைக்கும் நம்பிக்கை அவருக்கு மிகவும் முக்கியமானது.
உங்களுக்கு எந்த மாற்றமும் ஏற்படாத ஒரு சூழ்நிலையில் நீங்கள் இருந்தால், உதாரணமாக சுகம் கிடைக்காமலும், வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லாமலும், தாமதமான பதில்களுக்காக காத்திருக்கும் போதும், இதை நினைவில் கொள்ளுங்கள்: தேவன் இன்னும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
தனியாக நீங்கள் விடும் கண்ணீரையும், இருளில் நீங்கள் ஏறெடுக்கும் ஜெபங்களையும், உங்கள் உள்ளம் எல்லாவற்றையும் விட்டுவிட சொல்லும்போது நீங்கள் உயிர்ப்புடன் வைத்திருக்கும் நம்பிக்கையையும் அவர் காண்கிறார்.
இன்று நீங்கள் பார்க்காமலேயே நம்பத் துணிவீர்களா? உங்கள் சூழ்நிலைகள் சிறிது காலம் மாறாமல் இருந்தாலும், தேவனுடைய வார்த்தையின்படி அவரை நம்புவதற்கு தேர்ந்தெடுப்பீர்களா?
