எந்த நிபந்தனையும் இல்லை
உங்கள் இதயத்தை முழுவதுமாகத் திறந்து தயாராகுங்கள்!
அடுத்த ஏழு நாட்களுக்கு, மிகவும் வல்லமை வாய்ந்த கருப்பொருளைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து நான் பயணிக்க விரும்புகிறேன். அதன் ஆழமான அர்த்தத்தை நீங்கள் உண்மையிலேயே புரிந்துகொண்டால், அது உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும். அதுதான் அன்பு.
இந்த உலகம் அளிக்கும் நிலையற்ற, நிபந்தனைக்குட்பட்ட, நொறுங்கக்கூடிய அன்பு அல்ல - தெய்வீகமான, நித்தியமான, புரிதலுக்கு அப்பாற்பட்ட அன்பு. இந்த வகையான அன்பிற்கு ஆங்கில அகராதியில் ஒரு வார்த்தையும் இல்லை, அதனால் நான் கிரேக்க வார்த்தையான அகப்பே (Agápē) அதாவது ‘தெய்வீக’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்.
இந்த வார்த்தையின் வேர்களைக் கண்டறிவதன் மூலம் ஆரம்பிப்போம்.“கோயின் கிரேக்கம்” என்பது புதிய ஏற்பாட்டை எழுத பயன்படுத்தப்பட்ட ஒரு பழங்கால மொழியாகும். கிரேக்க மொழியில் ‘அகப்பே’ என்ற வார்த்தை அன்பை ஒரு பரந்த அர்த்தத்தில் குறிக்கிறது.
அன்புக்கான மற்ற கிரேக்க வார்த்தைகளான ஈரோஸ் (Eros - காதல் அல்லது உணர்ச்சிபூர்வமான அன்பைக் குறிக்கிறது), ஃபிலியா (Philia - நட்பு மற்றும் சகோதரத்துவ அன்பிற்கானது) மற்றும் ஸ்டோர்கே (Storagē - பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கிடையேயான குடும்ப அன்பிற்கானது) ஆகியவற்றிலிருந்து வேறுபட்டு, இந்த வார்த்தை, புதிய ஏற்பாட்டில் ஒரு சிறப்பான, புனிதமான பொருளைப் பெற்றது.
அகப்பே, தன்னலமற்ற மற்றும் நிபந்தனையற்ற தெய்வீக அன்பைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. இது பெறுபவரின் தகுதியைச் சார்ந்தது அல்ல, மாறாக, எத்தகைய சூழ்நிலையிலும் அன்பு செய்யத் தேர்ந்தெடுப்பவரிடமிருந்து வருகிறது. இது பெரும்பாலும் ஒருதலைப்பட்சமானது.
அகப்பே என்பது ஆண்டவரின் மிகச்சரியான மற்றும் நித்தியமான இயல்பு.
“தேவன் அன்பாகவே (அகப்பே) இருக்கிறார்.” - 1 யோவான் 4:8.
அதன் சாராம்சத்தில், அகப்பே என்பது நிபந்தனைகளே இல்லாத அன்பு. இது தியாகத் தன்மை உடையது - ஏனெனில் அது எதையும் திரும்ப எதிர்பார்க்காது. மேலும் அது மாற்றியமைக்கக்கூடியது - ஏனெனில் அது அதைப் பெறுபவரை மட்டுமல்ல, அதைக் கொடுப்பவரையும் மாற்றுகிறது.
மாற்கு 12:29-31-ல், இயேசு இந்த அன்பை அனைத்திலும் மிகப் பெரிய கட்டளையாக அழைத்தார்:
“இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.”
அன்பரே, நாம் ஆண்டவரின் தெய்வீக ஆழத்திற்குள் இந்த பயணத்தைத் தொடங்கும்போது, உங்களுக்கான எனது இன்றைய ஜெபம் இதுதான்: இந்த அன்பை உங்கள் மனதால் அறிந்துகொள்வது மட்டுமல்லாமல், உங்கள் இருதயத்தால் அதை சந்தித்து, அது உங்களுக்குள்ளிருந்து வழிந்து, உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் தொடும் வரை நீங்கள் அதால் நிறைந்து வழிய வேண்டும்.