அதை நாம் உண்மையிலேயே கேட்டோமா?!?

இன்று நீங்கள் ஆண்டவரால் அன்பு செய்யப்படுவதாக உணர்கிறீர்களா?
நீங்கள் உணர்கிறீர்கள் என்று நம்புகிறேன்! ஆனால் சிலருக்கு இது ஒரு சங்கடமான கேள்வியாக இருக்கலாம் என்பதையும் நான் அறிவேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் எப்போதும் ஆண்டவரின் அன்பை ஒரே தீவிரத்துடன் அனுபவிப்பதில்லை. சில சமயங்களில், நமது ஜெபங்கள் கேட்கப்படும்போது, நாம் ஆழமாக அன்பு செய்யப்படுவதாக உணர்கிறோம். ஆனால் நாம் ஏங்கும் அற்புதங்கள் தொலைவில் இருக்கும்போது, கைவிடப்பட்டதாகவோ அல்லது மறக்கப்பட்டதாகவோ உணரும் நேரங்களும் உண்டு.
எனக்கும் ஜெனிக்கும் இந்த போராட்டம் மிகவும் உண்மையானது. ஜாக்கின் மருத்துவ ரீதியாக சிக்கலான பயணத்தில் நாங்கள் கடந்து சென்ற கடினமான ஆண்டுகளில், நாங்கள் மிகவும் நம்பிக்கையற்றவர்களாக உணர்ந்த எண்ணற்ற தருணங்களில், ஆண்டவரிடம் கேட்டோம்: “நீர் இன்னும் எங்களை நேசிக்கிறீரா? ஜாக்கை நீர் உண்மையிலேயே நேசிக்கிறீரா?”, என்று.
ஆம்! நாங்கள் அந்தக் கேள்விகளைக் கேட்டோம்.
அன்பரே, ஒருவேளை நீங்களும் இன்று உங்கள் இதயத்தில் இதே போன்ற ஒரு கேள்வியைக் கொண்டிருக்கலாம்.
அப்படியானால், நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய எதையும் விட ஆண்டவரின் தெய்வீக (அகப்பே) அன்பு உங்களுக்காக ஆழமானதாகவும், பரந்ததாகவும், வலிமையானதாகவும் உள்ளது என்பதை இன்று நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.ரோமர் 8:38-39-ல் அப்போஸ்தலர் பவுல் கூறுகிறார் :
"மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்."
பவுல் இதை சாதாரணமாக எழுதவில்லை, ஆழமான நம்பிக்கையுடன் எழுதுகிறார்.பவுல் தனது வாழ்க்கையில், ஆண்டவரின் அன்பைக் கேள்வி கேட்கக்கூடிய அளவிற்கு சோதனைகளையும், துன்புறுத்தல்களையும் மற்றும் கஷ்டங்களையும் எதிர்கொண்டார். ஆனால் சந்தேகப்படுவதற்குப் பதிலாக, ஆண்டவரின் அன்பு பிரிக்க முடியாதது என்று உறுதியுடன் அறிவிக்கிறார்.
எதுவும் - சூழ்நிலை, ஆன்மீக வல்லமை, நேரம், தவறு என வெளிப்புறமான எதுவும் - அவருடைய அரவணைப்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது.
இது உங்கள் வாழ்க்கைக்கு எப்படி அர்த்தம் சேர்க்கிறது? ஜெபங்கள் கேட்கப்படாதபோது, சுமைகள் மிகவும் கனமானதாக உணரும்போது, மற்றும் நீங்கள் தகுதியற்றவர் என்று அவமானம் அல்லது குற்ற உணர்வு கிசுகிசுக்கும்போது கூட, ஆண்டவரின் அன்பு உண்மையானது என்பதே இதன் அர்த்தம்.
அன்பரே, வேதனையும் பிரச்சினைகளும் உங்களைச் சூழ்ந்திருக்கலாம், ஆனால் ஆண்டவரின் தெய்வீக அன்பும் உங்களைச் சூழ்ந்துள்ளது, மேலும் உலகில் உள்ள எதுவும் உங்களை அவரிடமிருந்து பிரிக்க முடியாது.

