அழுத்தமாகப் பற்றிக்கொள்ளும் பசை போன்ற அன்பு!
சமீபத்தில், என்னுடைய வீட்டில் உள்ள ஸ்டுடியோவின் சுவர்களில் சில இலகுரக சவுண்ட் பேனல்களை சரிசெய்ய முயற்சித்தேன். எதிர்காலத்தில் அவற்றை அகற்றும்போது சுவர்களுக்கு சேதம் ஏற்படாதவாறு பேனல்களைப் பிடித்துக்கொள்ளும் ஒரு பசையைப் பயன்படுத்த விரும்பினேன். டேப்கள், பசைகள், மற்றும் நான் யோசித்த வேறு எல்லா விதமான சாதனங்களையும் பயன்படுத்தினேன். ஆனால் நான் எதை முயற்சித்தாலும், பேனல்கள் விழுந்துகொண்டே இருந்தன. கடைசியில், நான் விட்டுவிட்டேன். 😒
ஆனால், இந்த அனுபவம் எனக்கு வாழ்க்கையின் மற்ற பல விஷயங்களை நினைவூட்டியது.
நமது வேலைகள், கல்வி, உறவுகள், மற்றும் நட்புகள் போன்ற விஷயங்களை நாம் நம்பியிருக்கிறோம். அவை முதலில் உறுதியாகத் தோன்றினாலும், காலப்போக்கில் தளர்ந்து, மங்கி, அல்லது முற்றிலும் உடைந்துபோகலாம்.
அவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிலைத்திருக்கும், ஆனால் என்றென்றும் அல்ல.
இருந்தாலும், ஒரு உறவு மட்டும் ஒருபோதும் பலவீனமடைவதில்லை, ஒரு அன்பு மட்டும் ஒருபோதும் விட்டுவிடுவதில்லை – அதுவே ஆண்டவரின் தெய்வீக அன்பு.
கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. – சங்கீதம் 136:1
கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறுக்கும் உள்ளது. – சங்கீதம் 100:5
கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது. – சங்கீதம் 103:17
இந்த வசனங்களின் அழகு "என்றென்றைக்கும் உள்ளது" மற்றும் "தலைமுறை தலைமுறுக்கும் உள்ளது" என்ற வார்த்தைகளில் உள்ளது.
காலப்போக்கில் பலவீனமடையும் இந்த உலகின் பசைகளைப் போலல்லாமல், ஆண்டவரின் தெய்வீக அகப்பே அன்பு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ஒட்டிக்கொள்ளாமல் – நித்தியத்திற்கு நிலைத்திருக்கும்.
அது வேதனையான தருணங்களிலும் நிலைத்திருக்கும், கேள்விகள் எழும்பும் தருணங்களிலும் நிலைத்திருக்கும். அது இருண்ட பள்ளத்தாக்கின் வழியாக கடந்து செல்லும்போதும் நிலைத்திருக்கும். அது நம் தோல்விகளின் பாரத்திலும், நம் சந்தேகங்களின் புயல்களின் மத்தியிலும், காலத்தின் போக்கிலும் இறுக பற்றிக்கொள்ளும் பசையாக உள்ளது.
ஆண்டவர் உங்களை நேசிப்பதில் ஒருபோதும் சோர்வடைவதில்லை!இன்று அவருடைய தளராத அன்புக்காக அவருக்கு நன்றி சொல்லுங்கள்.