விட்டுவிடு, ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு
என்னை நன்கு அறிந்தவர்களுக்கு, நான் எந்நிலையிலும் தன்னாதிக்கத்தை விரும்புபவள் என்பதை அறிவது வியப்பளிக்காது — இது பிறரை அதிகாரம் செய்வதற்காக அல்ல, மாறாக எனது சொந்த வாழ்க்கையை நெறிப்படுத்துவதற்காகவே. அனைத்தும் திட்டமிட்டபடியா சீராக அமையும்போது நான் ஒரு பாதுகாப்பு உணர்வைப் பெறுகிறேன்.
ஆனால், நாம் அனைத்தையும் முன்கூட்டியே தீர்மானித்து வைத்திருக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்ப்பதில்லை. உண்மையில், நமது சுய மேலாண்மையைச் சார்ந்திருப்பதை விட, நம்மை அவரிடம் முழுமையாக கையளித்து, அவரது வழிநடத்துதலில் நம்பிக்கை கொள்ளவே அவர் நம்மை அழைக்கிறார்.
இவ்விஷயத்தில் எனக்கு மிகவும் பிடித்த போதகர் டாக்டர் எம். ராபர்ட் முல்ஹோலண்ட் ஜூனியர் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
நமது ஆன்மீகப் பயணம் என்பது படைத்தவரைத் தேடி புறப்படுவதல்ல. மாறாக, அது நம்மை தேவனுக்கு அடிபணிய கற்றுக்கொள்வதும், அவர் நம்மை எவ்வழியே அழைத்து செல்கிறார் என்பதைக் கண்டறிவதுமான ஒரு பயணமாகும்.
'அடிபணிதல்' என்பது நாம் கட்டுக்குள் கொண்டுவர செய்யும் முயற்ச்சிகளை தளர்த்துவதைக் குறிக்கும் ஒரு மேன்மையான சொல்லாகும்.
நமது வாழ்க்கை என்பது எப்போதும் பெரியதாகவும், சிறந்ததாகவும் அல்லது பரிசுத்தமானதாகவும் இருக்க வேண்டும் என்ற அழுத்தத்தினால் உந்தப்பட்ட முயற்சியல்ல. அதற்குப் பதிலாக, தேவன் நம்மை ஒரு விசுவாச பயணத்திற்கு அழைக்கிறார் — அதில் அவர் முன்செல்ல நாம் அவரைப் பின்தொடர்கிறோம்.
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். – நீதிமொழிகள் 3:5-6
கட்டுப்படுத்த செய்யும் முயற்ச்சிகளை துறந்து அவரிடம் ஒப்படைக்கும்படி தேவன் நம்மை அழைக்கிறார். இது சவாலானது, எனினும் மனதிற்குப் பேரமைதியைத் தரக்கூடியது. இதனை நான் அமைதி மற்றும் தனிமை வாயிலாகப் பயிற்சி செய்கிறேன். நீங்களும் இதனை முயற்சிக்கலாம். இசை, அலைபேசி அல்லது இதர கவனச்சிதறல்கள் இன்றி 15 நிமிடங்கள் அமைதியாகத் தனித்திருங்கள்.
யாதொரு இடையூறுமின்றி, இசையோ அலைபேசியோ இன்றி, சுமார் 15 நிமிடங்கள் நான் அமைதியாக அமர்ந்திருப்பேன்.
அவ்வாறு அமர்ந்திருக்கும் பொழுது, உங்கள் பணி, குடும்பம், பொருளாதாரம் மற்றும் போராட்டங்கள் என நீங்கள் கட்டுப்படுத்த நினைக்கும் அனைத்தும் உங்கள் கைகளை பிணித்திருக்கும் நூல்களைப் போன்றது என கற்பனை செய்யுங்கள். பின்னர், உங்கள் கரங்களை விரித்து, “ஆண்டவரே, நான் இவற்றையெல்லாம் உம்மிடம் ஒப்படைக்கிறேன். உம்மையே நான் முழுமையாக நம்புகிறேன்” என்று கூறுங்கள்.
இதனை முயற்சித்து பார்க்க உங்களை அழைக்கிறேன். இதனைச் செய்தவுடன் ஒரு பெரிய மாற்றம் நிகழாமலோ அல்லது உங்கள் சிக்கல்கள் உடனடியாகத் தீராமலோ போகலாம். ஆனால் கீழ்ப்படிதலுடன் தேவனை நம்ப முற்படும் இந்த எளிமையான செயல், ஒரு உன்னதமான ஆரம்பமாக அமையும்.