கார்ட்டூன் போல வாசிக்கக்கூடிய ஒரு பைபிள் கதை
இந்த வாரம், அப்போஸ்தலர் 12-ஆம் அதிகாரத்தில் பேதுரு சிறையிலிருந்து அற்புதமாகத் தப்பிய நிகழ்வை நாம் ஆராய்ந்து வருகிறோம். இன்று, இந்தச் சரித்திரத்தின் எனக்கு மிகவும் பிடித்தமான பகுதிக்கு வருகிறோம்; ஏனெனில், உண்மையிலேயே இது எனக்கு மிகுந்த நகைச்சுவையாகத் தோன்றுகிறது. இந்தத் தத்ரூபமானக் காட்சிகளை கற்பனை செய்து பார்ப்பது ஒரு நகைச்சுவை சித்திரத்தைப் பார்ப்பது போலவே அமையும் (Tom and Jerry cartoon).
தூதரால் விடுவிக்கப்பட்ட பேதுரு, தனது விடுதலைக்காக மற்ற விசுவாசிகள் கூடி ஜெபித்துக் கொண்டிருந்த வீட்டிற்குச் செல்ல முடிவெடுக்கிறார்:
"பேதுரு வாசற்கதவைத் தட்டினபோது ரோதை என்னும் பேர்கொண்ட ஒரு பெண் ஒற்றுக்கேட்க வந்தாள். அவள் பேதுருவின் சத்தத்தை அறிந்து சந்தோஷத்தினால் கதவைத் திறவாமல், உள்ளேயோடி, பேதுரு வாசலுக்குமுன்னே நிற்கிறார் என்று அறிவித்தாள். அவர்கள்: நீ பிதற்றுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தானென்று உறுதியாய்ச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அவருடைய தூதனாயிருக்கலாம் என்றார்கள்." – அப்போஸ்தலர் 12:13-15
அந்த பெண் அதிக மகிழ்ச்சியினால் கதவைத் திறக்கவே மறந்துவிட்டாள்; பாவம் பேதுரு, தப்பியோடிய ஒரு கைதியாக வீதியிலேயே நிற்கிறார். ஆனால் உள்ளே இருப்பவர்களோ வாசலில் நிற்பது பேதுருவா அல்லது அவரது தூதரா என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? "யாராவது தயவுசெய்து அந்தக் கதவைத் திறங்களேன்!" என்று கத்தத் தோன்றும்.
சிறையில் இருப்பதாக அவர்கள் நம்பிய பேதுரு வாசலில் இருப்பதை விட, ஒரு தூதர் அங்கு வந்திருப்பார் என்பதே சாத்தியம் என்று அவர்கள் நினைத்தது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.
உங்கள் கதவருகே பலமுறை தூதர்கள் வந்திருக்கிறார்களா? எனக்கு இதுவரை இல்லை! பேதுரு சிறையிலிருந்து தப்பிக்க எந்த வழியும் இல்லை என்றே அவர்கள் உறுதியாக நம்பினர் என்பது இதிலிருந்து தெரிகிறது.
இந்தச் சரித்திரத்தை நான் சிந்திக்கும்போது, இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் எவ்வளவு இயல்பான மனிதர்களாக இருந்தார்கள் என்பது என் கவனத்தை ஈர்க்கிறது. மறதி, அவிசுவாசம், குழப்பம், உற்சாகம், தடுமாற்றம் என மனிதர்களின் பல்வேறு உணர்வுகள் இங்கே வெளிப்படுகின்றன.
நாம் சில நேரங்களில் போதகர்கள் அல்லது ஆராதனைத் தலைவர்கள் போன்ற ஆன்மீகத் தலைவர்களை மிகவும் உயர்த்திப் பார்க்கிறோம்; இது அவர்கள் மிகவும் பரிசுத்தமானவர்கள் அல்லது குறையற்றவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்கக்கூடும், ஆனால் அது உண்மையல்ல.
சாதாரண மனிதர்களைத் தமது மகிமைக்காக பயன்படுத்த தேவன் விரும்புகிறார் என்பதற்கான நினைவூட்டலாக இந்தச் சரித்திரம் உங்களுக்கு அமையட்டும்.