நீ ஏன் பயப்படுகிறாய்?
நான் எளிதில் பயப்படுபவள்; அவ்வாறு பயப்படும்போது அந்த அதிர்ச்சியில் நான் துள்ளி குதிப்பதுண்டு. ஆனால் எனது கணவர் இதற்கு நேர்மாறானவர்; அவர் எதற்கும் எளிதில் கலங்காதவர்.
சில நேரங்களில் நான் கதவைத் திறக்கும்போது அவர் அதற்குப் பின்னால் இருப்பதை நான் கவனிப்பதில்லை, அல்லது அவர் வருவதை நான் கவனிப்பதில்லை; திடீரென அவர் எனக்கு அருகில் வந்து நிற்பார். அது பொதுவாக என்னை திடுக்கிட வைக்கும், அப்போதெல்லாம் அவர் என்னிடம், "ஏன் பயப்படுகிறாய்? நான் இந்த வீட்டிற்குள்தான் இருக்கிறேன் என்று உனக்குத் தெரியும் அல்லவா?" என்று கேட்பார். 🤷🏻♂️
இயேசுவும் தமது சீடர்களிடம் இதேபோன்ற ஒரு கேள்வியைக் கேட்டார்: "ஏன் பயப்படுகிறீர்கள்?"
அவர்கள் ஒரு படகில் செல்லும்போது ஒரு புயல் வீசுகிறது, அப்போது சீடர்கள் பீதியடைகிறார்கள்:
"அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார், உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று." – மத்தேயு 8:26
இதேபோல், பேதுரு படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கி நடந்து சென்றபோது, திடீரென விசுவாசம் குறைந்து மூழ்கத் தொடங்கியதைக் கண்ட இயேசு, “அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய்…? (மத்தேயு 14:31) என்று அவரிடம் கேட்டார்.
இயேசு, "ஏன் பயப்படுகிறீர்கள்?" அல்லது "ஏன் சந்தேகப்பட்டீர்கள்?" என்று கேட்கும்போது, அவை ஏமாற்றமடைந்த ஒரு ஆசிரியர் கடிந்துகொள்வது போன்ற கேள்விகள் அல்ல; மாறாக, என் கணவர் என்னிடம் "ஏன் பயப்பட்டாய்? நான் இங்கேதான் இருக்கிறேன் என்று உனக்குத் தெரியும் அல்லவா?" என்று கேட்கும் அதே அன்பான அக்கறையுடன் கூடிய கேள்விகளாகும்.
'அற்பவிசுவாசிகளே' என்ற சொற்றொடரை இயேசு ஐந்து முறை பயன்படுத்தியுள்ளார், ஆனால் அது தமது சீடர்களிடம் மட்டுமே. தாம் சந்தித்த நோயாளிகளிடமோ அல்லது தன்னிடம் அற்புதம் வேண்டி வந்தவர்களிடமோ இயேசு ஒருபோதும் 'அற்பவிசுவாசியே' என்று கூறவில்லை.
இந்தச் சொற்றொடரை தமக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்காக, அவரது உண்மைத்தன்மையை மீண்டும் மீண்டும் கண்டவர்களுக்காக, அவரது அன்பை நேரில் அனுபவித்தவர்களுக்காக மட்டுமே அவர் பயன்படுத்தினார். அந்த வார்த்தையை கண்டிப்பதற்காக அவர் பயன்படுத்தவில்லை. "எனது முன்னிலையில் இருப்பதற்குத் தகுதியடைய நீங்கள் பெரிய விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டும்" என்று இயேசு சொல்லவில்லை.
இல்லை, இது அவரது சீடர்களுக்கான ஒரு இனிமையான நினைவூட்டல்: "நான் உங்களுடன் இங்கே இருக்கிறேன்; நீங்கள் பயப்படத் தேவையில்லை." என்ற அர்த்தம்.
இயேசு உங்களைப் பார்த்தும் இதையே தான் கூறுகிறார்!