நீங்கள் எப்படிப்பட்ட பிள்ளை?
நீங்கள் தேவனுடைய பிள்ளை என்பதை நேற்று நாம் உறுதிப்படுத்தினோம்.
இன்று, நீங்கள் ஏதோ ஒரு சாதாரணப் பிள்ளை அல்ல; நீங்கள் அவருடைய மிகவும் அன்பிற்குரிய பிள்ளை என்பதைக் காட்ட விரும்புகிறேன்.
"ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி." – எபேசியர் 5:1
இவ்வுலகக் குடும்பங்களில், பிள்ளைகள் கவனிக்கப்படாமலோ, உதாசீனப்படுத்தப்பட்டோ அல்லது அன்பின்றியோ இருக்கலாம். ஆனால் கிறிஸ்துவுக்குள் நமது வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல. தேவனுடைய பிள்ளைகளாக, நாம் அவராலே ஆழமாக நேசிக்கப்படுகிறோம்.
அன்பு என்பது தியாகத்தின் மூலமே மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது. ஒருவர் எந்தளவுக்குத் தன்னலமற்றவராக இருக்கிறாரோ, அந்தளவுக்கு அவருடைய அன்பு உண்மையானது.
யாராவது உங்களிடம் அன்பு செலுத்துவதாகக் கூறிவிட்டு, தியாகம் செய்ய வேண்டிய நேரம் வரும்போது, அவர்கள் தங்களுடைய நலனை மட்டும் தேர்ந்தெடுத்ததை நீங்கள் எப்போதாவது அனுபவித்திருக்கிறீர்களா? அது மிகவும் வேதனையானது!
தேவனோ, தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் உன்னதமான தியாகத்தின் மூலம் ஏற்கனவே நம் மீதுள்ள அன்பை நிரூபித்துள்ளார்.
"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்." – யோவான் 3:16
அதைவிட மேலான அன்பு வேறொன்றுமில்லை!
"ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை." – யோவான் 15:13
அவருடைய பிரியமான பிள்ளையாகிய உங்கள் மீது, ஆசீர்வாதங்களையும் பரிசுகளையும் பொழிய வேண்டும் என்பதையே தேவன் பெரிதும் விரும்புகிறார்.
"உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?" – மத்தேயு 7:9-11
இதில் மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், எதுவுமே உங்களை அவருடைய அன்பிலிருந்து பிரிக்க முடியாது.
"மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்." – ரோமர் 8:38-39