ஒரு குழந்தையை கொல்ல உங்களுக்கு எப்படி மனம் வந்தது??
இந்தியாவில், எனக்குத் தெரிந்தவரை, பிரசவத்தின் போது மருத்துவச்சிகளைப் (midwife) பயன்படுத்தும் முறை ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. பெரும்பாலான பெண்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் உதவியுடன் மருத்துவமனைகளிலேயே குழந்தைப் பெற்றெடுக்கிறார்கள்.
இருப்பினும், ஜாக்கின் (Zac) பிறப்பை நான் இன்னும் நினைவுகூர்கிறேன். அந்த அறையில் இருந்த மருத்துவச்சி அற்புதமான பணியைச் செய்தார். அவர் அமைதியாக இருந்து, எல்லாவற்றையும் எனக்கு விளக்கிச் சொன்னதுடன், எனக்கும் குழந்தைக்கும் எல்லாம் நலமாக இருப்பதை உறுதி செய்ய எனது இதயத் துடிப்பையும் குழந்தையின் இதயத் துடிப்பையும் தொடர்ந்து பரிசோதித்து வந்தார்.
மோசேயின் கதையிலும் மருத்துவச்சிகளைப் பற்றி வேதாகமம் குறிப்பிடுகிறது. எகிப்தில் இருந்த இஸ்ரவேலர்களுக்கு சிப்பிராளும் பூவாளும் எபிரெய மருத்துவச்சிகளாக இருந்தனர். இவர்களது பெயர்களுக்கு "அழகு" மற்றும் "பிரகாசம்" என்று பொருள், இந்த குணங்கள் அவர்களின் குணாதிசயங்களிலும் பிரதிபலித்தன.
யாத்திராகமம் 1:15-16-ல், எகிப்தில் அடிமைகளாக இருந்த எபிரெய மக்களிடையே ஒரு எழுச்சி ஏற்படும் என்று அஞ்சிய பார்வோன், பிறக்கும் ஆண் குழந்தைகள் அனைவரையும் கொல்லுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டான்.
எந்த மருத்துவச்சியால் அப்படிச் செய்ய முடியும்? குழந்தைகளை பாதுகாப்பாகப் பெற்றெடுப்பதே அவர்களின் அழைப்பு, அவர்களைக் கொலை செய்வது அல்ல! ஆனால், அந்த மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்து, எகிப்து ராஜா தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்யாமல், ஆண் பிள்ளைகளை உயிரோடு வைத்தார்கள் (யாத்திராகமம் 1:17).
சிப்பிராளும் பூவாளும் தைரியமாக பார்வோனை எதிர்த்தார்கள். அவர்கள் தேவனுக்குப் பயந்ததினால், அவர் அவர்களை ஆசீர்வதித்து, அவர்களுக்குக் குடும்பங்களை அளித்தார் (வசனம் 21).
பெலனும் தைரியமும் வேதாகமத்தில் அடிக்கடி வலியுறுத்தப்படும் குணங்களாகும், உதாரணமாக யோசுவா 1:9-ல் இந்த வசனத்தைப் பார்க்கலாம்:
"நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.."
சிப்பிராளும் பூவாளும் பெலத்திற்கும் தைரியத்திற்கும் மிகச்சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள். பார்வோனின் நேரடி உத்தரவை மீறியது அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கலாம், ஆனாலும் அவர்கள் ராஜாவுக்குப் பயப்படுவதை விட தேவனுக்கு அதிகம் பயந்தார்கள்.
உங்கள் வாழ்க்கையில் சிப்பிராள் மற்றும் பூவாளைப் போன்ற பெலனும் தைரியமும் தேவைப்படும் பகுதிகள் ஏதேனும் உண்டா? தாவீது ராஜாவின் இந்த வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள்:
"தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?" - சங்கீதம் 56:4