ஒரு சத்தமான பதில்
இனிய திங்கட்கிழமை வாழ்த்துக்கள்! உங்கள் வார இறுதி நாட்கள் எப்படி இருந்தன?
இந்த வார அதிசயங்களுக்காக ஒரு வித்தியாசமான காரியத்தைச் செய்ய நான் முடிவு செய்துள்ளேன். எனக்கு மிகவும் தெரிந்த ஏழு பாடல்கள் மற்றும் அவற்றின் பின்னணியில் உள்ள கதைகள் வழியாக ஒரு தனிப்பட்ட பயணத்திற்கு உங்களை அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.
எனது 17 வயதில் நான் எழுதிய முதல் பாடலில் இருந்து இதைத் தொடங்குகிறேன். அது விரைவில் இந்தி வழிபாட்டுப் பாடல்களில் ஒரு முக்கியப் பாடலாக மாறி, உலகம் முழுவதும் உள்ள இந்தி பேசும் சபைகளில் பாடப்படலானது.
அதன் கதை இதோ.
ஒவ்வொரு ஆண்டும், நான் வசித்த கட்டிடத்திற்கு அருகிலே, செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில், ஒரு மத விழாவிற்கான கொண்டாட்ட மையமாகச் செயல்படும் ஒரு கூடாரத்தை, என் சுற்றுப்புறத்திலிருந்த மக்கள் அமைப்பார்கள்.
பல நாட்களாக, அவர்கள் தங்கள் சிலைகளுக்காக அதே பாடல்களை உரக்க ஒலிப்பார்கள், அவற்றில் ஒன்று: "தேவா, ஓ தேவா, கணபதி தேவா, தும் சே பட்கர் கோன்?" (தேவனே, உங்களை விட பெரியவர் யார்?) என்று கேட்கும்.
"உங்களை விட பெரியவர் யாராவது இருக்கிறார்களா?" என்ற இந்தக் கேள்வி என்னைக் கவர்ந்தது, ஏனென்றால் ஒரு கிறிஸ்தவனாக, வேதாகமம் இதற்கு பதிலளிக்கிறது என்பதை நான் அறிந்திருந்தேன்!
"ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்." – பிலிப்பியர் 2:9-11
எனது அண்டை வீட்டார் தங்கள் கடவுளிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, நான் எழுதிய முதல் வரி, "Yeshu Tera Naam Sabse Uncha Hai" (இயேசுவே, உமது நாமம் எல்லாவற்றிற்கும் மேலானது). அந்த ஒரு எளிய வரி, நான் எழுதிய பாடல்களிலேயே மக்கள் அதிகம் விரும்பிக் கேட்கும் பாடலாக மாறியது: Yeshu Tera Naam Sabse Uncha Hai
இறுதியாக அந்தப் பாடல் வெளியானபோது, எனது ஹோம் தியேட்டர் சிஸ்டத்தில் முழு சத்தத்துடன் அதை ஒலிக்கச் செய்வேன், அந்த இசை எனது வீட்டின் சுவர்களைத் தாண்டி வெளியே பரவும்—அதன் மூலம் அந்தத் திருவிழாவின் போது பூஜையில் கலந்து கொள்ளும் அனைவரும் அதைக் கேட்க முடியும்.
அவர்களுக்குத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், நம்மைச் சுற்றியுள்ள உலகம் பதில்களைத் தேடிக்கொண்டிருக்கிறது, அவர்களிடம் கொடுப்பதற்கு நம்மிடம் மிகச்சிறந்த பதில் உள்ளது: அவர்தான் இயேசு!
அவர் அறிக்கையிட்டது:
"ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்." – யோவான் 6:35