கோழிக்குழம்புப் பாடல்
பல ஆண்டுகளாக, எனது பல பாடல்களின் புதுப்பிக்கப்பட்ட பதிப்புகளை நான் வெளியிட்டுள்ளேன். மக்கள் பெரும்பாலும் இன்னும் அந்தப் பாடல்களை விரும்புவதாலும், ஆனால் அதன் இசை சற்று பழையதாகத் தெரிந்ததாலும் அவ்வாறு செய்தேன்.
இருப்பினும், ஒரு பாடலை நான் வெறும் பாணிக்காக மட்டும் மாற்றவில்லை, எனது தம்பியும் நானும் எழுதிய அசல் வரிகளைப் பற்றிய எனது எண்ணம் மாறியதால் அதை மீண்டும் உருவாக்கினேன்.
ஒரு வழிபாட்டுத் தலைவராக எனது பயணத்தின் ஆரம்பத்திலிருந்தே, எனது வழிகாட்டும் கொள்கை மிகவும் எளிமையானது: இது அனைத்தும் இயேசுவைப் பற்றியது.
எனது தந்தை அடிக்கடி சொல்வார், "கோழி இறைச்சி இல்லாத கோழிக்குழம்பு வெறும் குழம்புதான்." அதேபோல், இயேசுவின் பெயர் இல்லாத ஒரு வழிபாட்டுப் பாடல் வெறும் பாடல்தான் என்று நான் நம்புகிறேன்—அதில் இசை இனிமையாக இருக்கலாம், ஆனால் ஏதோ ஒன்று குறைவாக இருக்கும்.
ஆனாலும், நான் அத்தகைய பாடல்களுக்கு எதிரானவன் அல்ல. சொல்லப்போனால், சில நேரங்களில் நான் அர்த்தமுள்ள வரிகளைக் கொண்ட பாலிவுட் பாடல்களைக் கூட தேவனுக்கான வழிபாட்டுப் பாடல்களாகப் பாடுவதுண்டு (ஆமாம், இது சில சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது 🤪). ஆனால் நான் எழுதும் பாடல்களைப் பொறுத்தவரை, அதில் எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது என்று நான் விரும்புவேன் : அவை இயேசுவைப் பாடுவதற்காகவும், அவரை மகிமைப்படுத்துவதற்காகவும், அவரது நாமத்தை மட்டுமே உயர்த்துவதற்காகவும் உருவாக்கப்பட்டவை.
இருப்பினும், நான் வெளியிட்ட ஒரு பாடல், அழகாக இருந்தும், இயேசுவின் பெயரோ அல்லது தேவனின் பெயரோ அதில் இடம் பெறவில்லை. நான் 'Le Chal Mujhe' பாடலைப் பற்றிச் சொல்கிறேன்.
அந்த காரணத்தினால், நான் ஒருபோதும் அதை ஒரு இசை நிகழ்ச்சியின் போது பாடியதில்லை. அது சரியாக எனக்குத் தோன்றவில்லை.
எனவே நான் மீண்டும் அந்த பாடலின் அடிப்படை வசனத்தைத் தியானித்தேன்:
“மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.” – சங்கீதம் 42:1
நான் தேவனை வாஞ்சிப்பது மட்டுமல்ல, அவரும் என்னை வாஞ்சிக்கிறார் என்பது எனக்குப் புலப்பட்டது. எனது இதயத்தைத் தேடி அவர் பரலோகத்தை விட்டு இறங்கி வந்தார்.
எனவே அந்தப் பாடலில் இயேசுவின் பெயரைச் சேர்த்து, எனது தவிப்பிலிருந்து கவனத்தை மாற்றி, அவருடைய அபரிமிதமான மற்றும் தியாகம் நிறைந்த அன்பின் மீது கவனம் செலுத்தும் வகையில் அதன் வரிகளை மீண்டும் எழுதினேன்.
இதன் விளைவாக, முதல் பாடல் வெளிவந்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு, நாங்கள் 'Le Chal Mujhe 2.0' வெளியிட்டோம்.
நீங்களும் இதைக் கேட்டு ஆண்டவரைத் துதியுங்கள்!