வேதாகமத்தில் மிக பரிசுத்தமாக இருந்தும் வெறுப்பை வெளிப்படுத்தியவர்
தேவனிடம் வெளிப்படையாக நேர்மையுடன் இருப்பதைப் பற்றிய நமது தொடரின் கடைசி நாளை நாம் அடைந்துவிட்டோம், இந்த வாரம் முழுவதும் புலம்பல்கள் நிறைந்திருந்தது போலத் தோன்றுகிறது.
ஆரவாரத்திலும் புகார்களிலும் ஒரு எதிர்மறையான சுழற்சியில் நீங்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று நான் உங்களை ஊக்குவித்தாலும், இந்த வாரத்திலிருந்து நீங்கள் எடுத்துக்கொள்ளும் பாடம் என்னவென்றால், அவ்வப்போது தேவனிடம் கொஞ்சம் வெளிப்படையாக நேர்மையாக இருப்பதில் தவறேதுமில்லை (பிரசங்கி 3:4).
தாவீது ராஜா ஆராதனையையும் புலம்பலையும் சமநிலைப்படுத்துவதில் வல்லவராக இருந்தார். வேதாகமத்தில் உள்ள எவரையும் விட, தாவீது தனது எதிரிகளுக்கு எதிராகப் பழிவாங்கும் ஜெபங்களை ஏறெடுத்தார் என்பது எனக்கு விசேஷமாக ஆர்வத்தைத் தூண்டுகிறது. உதாரணமாக:
“அவன் நாட்கள் கொஞ்சமாகக்கடவது; அவன் உத்தியோகத்தை வேறொருவன் பெறக்கடவன். அவன் பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவன் மனைவி விதவையுமாகக்கடவர்கள். அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, தங்கள் பாழான வீடுகளிலிருந்து இரந்துண்ணக்கடவர்கள்.” – சங்கீதம் 109:8-10
மேலும்
“அவர்களுடைய கண்கள் காணாதபடி அந்தகாரப்படக்கடவது; அவர்கள் இடுப்புகளை எப்போதும் தள்ளாடப்பண்ணும். உம்முடைய உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றும்; உம்முடைய கோபாக்கினி அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக.” – சங்கீதம் 69:23-24
😳 😳
இவை நிச்சயமாக சில வெளிப்படையான நேர்மையான வார்த்தைகள். தாவீது தனது எதிரிகள் மீதான தனது உணர்வுகளை இனிப்புப் பூசி மறைக்கவில்லை. எனவே, இந்த வசனங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
நீங்கள் பழிவாங்கும் குணம் கொண்ட நபராக மாறவும், உங்களுக்குப் பிடிக்காதவர்களுக்குத் தீங்கு விளைவிக்க விரும்பவும் நான் உங்களை ஊக்குவிக்கிறேனா? இல்லை!
ஆனால் உங்கள் இதயத்தில் நீங்கள் வைத்திருக்கும் பழிவாங்கும் எண்ணங்களை விடுவிக்கும்படி நான் உங்களை ஊக்குவிக்கிறேன். மனிதர்களிடம் அல்ல, ஆண்டவரிடம். ஏனென்றால் தேவனால் உங்கள் பழிவாங்கும் எண்ணங்களைக் கையாள முடியும்.
அத்தகைய எண்ணங்கள் கர்த்தரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்குப் பரிசுத்தமற்றவை என்று நீங்கள் கருதுவதால், அவை உங்கள் மனதில் ஊறிப்போக விடாதீர்கள். அவருக்கு அவை ஏற்கனவே தெரியும்!
நீங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் விஷயங்கள் இனி உங்கள் மேல் ஆதிக்கம் செலுத்தாது என்பது ஒரு ஆவிக்குரிய கொள்கையாகும்!
நான் மேலே பகிர்ந்த இரண்டு சங்கீதங்களின் (சங்கீதம் 69 மற்றும் சங்கீதம் 109) அழகு என்னவென்றால், அவை தாவீது தேவனைத் துதிப்பதோடு முடிவடைகின்றன. அவர் எப்போதும் பழிவாங்குவதிலேயே நிலைத்திருக்கவில்லை; அதைத் தேவனிடம் ஒப்படைத்தவுடன், அதற்குப் பதிலாக மகிழ்ச்சியான துதிக்குத் திரும்புகிறார்.