அது ஏதோ ஒரு சாதாரணமான வெள்ளிக்கிழமை அல்ல
இன்று புனித வெள்ளி, சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு, இயேசு நமக்காகச் சிலுவையில் தமது ஜீவனைக் கொடுத்த நாள்.
இயேசு ஒரு வெள்ளிக்கிழமையில் மரித்தார், ஆனால் அது ஏதோ ஒரு சாதாரண வெள்ளிக்கிழமை அல்ல; அவர் சிலுவையில் அறையப்பட்டது பஸ்கா பண்டிகையுடன் ஒத்துப்போனது. நிச்சயமாக, இது தற்செயலானது அல்ல, இது ஒரு தெய்வீகத் திட்டம்!
இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு வெளியேறத் தயாராகிக்கொண்டிருந்தபோது, ஆண்டவர் அவர்களுக்குக் கட்டளையிட்டார்:
“வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளக்கடவர்கள்... அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒருவயதுள்ளதுமாய் இருக்கவேண்டும்; செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்து கொள்ளலாம். அதை இந்த மாதம் பதினாலாம் தேதிவரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து.” – யாத்திராகமம் 12:3,5-7
அன்று இரவு, தேவனுடைய தூதன் எகிப்தின் மேல் நியாயத்தீர்ப்பு வழங்கி, தலைச்சன் பிள்ளைகள் அனைவரையும் சங்கரித்தார் - இஸ்ரவேலர்களின் வீடுகளைத் தவிர, ஏனென்றால் அங்கே ஆட்டுக்குட்டியின் இரத்தம் நிலைக்கால்களில் தெளிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவம் எகிப்திய பார்வோனுக்குக் கடைசி எச்சரிக்கையாக அமைந்தது, அவர் மக்களை வெளியேறும்படி அழைத்தார்.
இன்றுவரை, யூதக் குடும்பங்கள் ஆண்டுதோறும் ஒரு சிறப்பு விருந்துடன் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள், ஆனால் இயேசு வாழ்ந்த நாட்களில், அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டிகளைப் பலியிடுவதன் மூலம் அதைச் செய்தார்கள்.
தேவாலயத்தின் முற்றத்தில் பஸ்கா ஆட்டுக்குட்டிகள் பலியிடப்பட்ட அதே நேரத்தில், பஸ்கா பண்டிகையின்போது இயேசு சிலுவையில் அறையப்பட்டார்.😳
மரச்சட்டத்தில் செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் பூசப்பட்ட பஸ்கா ஆட்டுக்குட்டிகளின் இரத்தம், இஸ்ரவேலர்களை ஒரு இரவின்போது தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து காப்பாற்றியது. ஆனால் உன்னதமான பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய இயேசுவின் இரத்தம் சிலுவையில் சிந்தப்பட்டு, நம்மை என்றென்றைக்கும் மீட்டெடுத்தது!
“நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்தமாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே.” – 1 கொரிந்தியர் 5:7
நம்முடைய பாவங்களுக்காக பலியிடப்பட்ட அந்தப் பூரண பஸ்கா ஆட்டுக்குட்டியாக மாறிய இயேசுவுக்கு இன்று நன்றி சொல்ல ஒரு நிமிடம் ஒதுக்குங்கள்.