அவர்கள் கனவுகள் அனைத்தும் உடைந்துபோனது! 😱
உங்கள் வாழ்க்கையைப் பற்றிய கனவுகள் ஏதேனும் உங்களிடம் உண்டா? நீங்கள் எப்போதும் சாதிக்க விரும்பிய விஷயங்கள் அல்லது உங்கள் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய சில யோசனைகள்?
உங்கள் கனவுகளைத் துரத்துவதற்காக எப்போதாவது பெரிய தியாகங்களை செய்திருக்கிறீர்களா? வேறு நகரத்திற்க்கு மாறுவது, குடும்பத்தைப் பின்னே விட்டு வருவது? அல்லது நல்ல ஊதியம் கிடைக்கும் ஒரு தொழிலை விட்டுவிட்டு ஊழியத்தை தேர்ந்தெடுப்பது போன்றவைகள்?
இயேசுவின் சீஷர்களுக்கு அந்த உணர்வு எப்படி இருக்கும் என்று தெரியும்! அவர்கள் அனைவரும் இயேசுவைப் பின்பற்றுபவர்களாக மாறுவதற்காக தங்கள் வேலைகளை (மீன் பிடிப்பது அல்லது வரி வசூலிப்பது போன்றவற்றை) விட்டுவிட்டு வந்தார்கள். இயேசுவிடம் அவர்கள் ஒரு போதகரையும்... தங்கள் மேசியாவையும் கண்டிருந்தார்கள். யூத தேசத்தை விடுவிக்கும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவர் வருவார் என்று தோராவில் தீர்க்கதரிசனம் எழுதப்பட்டிருந்தது.
தங்களின் சிறந்த தலைவர் இறப்பதைப் பார்த்தபோது அவர்கள் எவ்வளவு குழப்பமடைந்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் என்ன செய்வதென்று அறியாமல் இருந்தார்கள். இயேசுவே அந்த இரட்சகர் என்று நம்பியதால், அவர்கள் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள், ஆனால் இப்போது அவர்களுக்கு அந்த நிச்சயம் இல்லாமல் போனது.
எம்மாவூர் போகிற வழியில் அந்த இரண்டு சீஷர்கள் சொன்னார்கள்:
"அவரே இஸ்ரவேலை மீட்டு இரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம்." – லூக்கா 24:21
இயேசு சிலுவையில் அறையப்பட்டு கொஞ்ச நாட்களே ஆகியிருக்கையில், அவர்கள் நம்பியிருந்ததைத்தான் இயேசு சிலுவையில் செய்தார் என்பதை அவர்கள் இன்னும் அறியாதிருந்தனர். அவர்களின் நம்பிக்கைகளும் கனவுகளும் உடைந்து போனதுபோல் அவர்கள் இருந்தனர்.
அவர்களின் உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. கேம்ரனும் நானும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று ஒருபோதும் கனவு கண்டதில்லை, ஆனால் தேவன் எங்களை அமெரிக்காவிற்கு அழைத்தபோது, நாங்கள் அங்கு சென்றோம், அதுவே எங்கள் கனவாக மாறியது. பின்னர், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அது திடீரென்று முடிவுக்கு வந்தது, ஏன் என்று எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை, குறிப்பாக தேவன்தான் எங்களை அங்கு முதலில் வழிநடத்தினார் என்பதால். இப்போது, பல ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவிற்கு வெளியே தேவன் எங்களுக்காக வைத்திருந்த ஆசீர்வாதங்களை நாங்கள் காண்கிறோம்.
இதுபோன்ற சூழ்நிலையில் நீங்களும் இருப்பதுபோல் உணர்கிறீர்களா? நீங்களும் சிதைந்த கனவுகளுடன் அல்லது நீங்கள் கற்பனை செய்த எதிர்காலத்தை இழந்த வருத்தத்துடன் போராடுகிறீர்களா? இந்த வசனத்தை நினைவில் கொள்ளுங்கள்:
"நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே." – எரேமியா 29:11