அந்நியர்கள்-ஜாக்கிரதை!🙅🏻♀️
“அந்நியர்களிடம் ஜாக்கிரதை” என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? குழந்தைகளைத் தற்காத்துக் கொள்வதற்காக, தங்களுக்குத் தெரியாதவர்களை நம்ப வேண்டாம் என்று எச்சரிக்க இது முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.
அந்நியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும் இந்தத் போக்கு பொதுவாக முதிர்வயது வரையில் நீடிக்கிறது. தீய மனிதர்கள் பல கெட்ட காரியங்களைச் செய்யும் உலகில் நாம் வாழ்வதால், பெரும்பாலான நேரங்களில் இது சரியானதே.
இருப்பினும், அந்நியர்களை வரவேற்கும்படி வேதாகமம் நமக்குச் சொல்கிறது:
"பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்." – மத்தேயு 25:35
எம்மாவு செல்கிற வழியில் சீஷர்களுக்கு நடந்த கதையில், இயேசுவே ஒரு அந்நியரைப் போல தனது சீஷர்களுள் இருவரை அணுகுவதைக் காண்கிறோம்; ஏனெனில் அவரை அடையாளம் தெரிந்துகொள்ளாதபடி அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன (லூக்கா 24:16).
அதனைத் தொடர்ந்து ஒரு அழகான உரையாடலும், நடைப்பயணத்தின் போதும் உணவருந்தும் போதும் ஆழமான விவாதங்களும் நிகழ்ந்தன. அந்த சீஷர்கள் பின்னர் ஒருவரையொருவர் நோக்கி, "வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?" (லூக்கா 24:32) என்று பேசிக்கொண்டார்கள்.
வழியில் தற்செயலாகத் தங்களோடு இணைந்த இந்த அந்நியரை அவர்கள் நிராகரித்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். தாங்கள் விவாதிப்பது மிகவும் தனிப்பட்டது என்று அவரிடம் சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும்? இயேசுவுடனான இந்த மிக நெருக்கமான சந்திப்பை அவர்கள் இழந்திருப்பார்கள்.
சில நேரங்களில் இயேசு எதிர்பாராத மற்றும் அறிமுகமில்லாத வழிகளில் நம்மிடம் வருகிறார் என்பதை இந்தக் கதை நினைவூட்டுகிறது. கிறிஸ்தவர்களாகிய நாம், நமக்குத் தெரிந்தவற்றிலேயே ஒட்டிக்கொண்டிருக்கவும், ஒரே மாதிரியான கலாச்சார மற்றும் சபை பின்னணி கொண்டவர்களையே நம்மைச் சுற்றி வைத்திருக்கவும் விரும்புவது இயல்பானது.
ஆனால் ஒரு அந்நியரை வரவேற்பதிலும், அவர்கள் மூலம் இயேசு உங்களுக்கு வெளிப்படுத்த விரும்புவதை ஏற்றுக்கொள்வதிலும் வல்லமை இருக்கிறது.
அடுத்த முறை உங்கள் சுபாவத்திலிருந்து மாறுபட்ட ஒருவரையோ, உங்களை விட வேறுபட்ட வாழ்க்கை அனுபவங்களைக் கொண்ட ஒருவரையோ, வேறு இனத்தைச் சேர்ந்தவரையோ, ஒரு முக்கியமான விஷயத்தில் வேறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பவரையோ அல்லது உங்கள் வாழ்வின் வேறு ஒரு நிலையில் இருப்பவரையோ நீங்கள் சந்திக்கும்போது இந்தக் கதையை நினைவில் கொள்ளுங்கள்.
எம்மாவு செல்லும் வழியில் அந்த இரண்டு சீஷர்களும் இயேசுவிடம் எவ்வளவு திறந்த மனதுடனும் ஏற்புத்தன்மையுடனும் இருந்தார்களோ, அதேபோல் உங்களைச் சுற்றியுள்ள அந்நியர்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?