இந்த விருந்து அழைப்பிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே! 💌
டச்சு நாட்டு திருமணங்களைப் பற்றி ஒரு விஷயத்தை சொல்கிறேன், நீங்கள் இந்தியராக இருந்தால் இது உங்கள் மனதையே உலுக்கிவிடும். அங்கே விருந்தினர்களில் வெவ்வேறு பிரிவுகள் உள்ளன. மிக நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பின் உணவு பந்தியில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள். மற்றவர்கள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு (reception) மட்டுமே அழைக்கப்படுவார்கள்... அதன் பிறகு அவர்களாகவே மரியாதையாகக் கிளம்பிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும். 🤯
பொதுவாக, ஒரு டச்சு திருமண அழைப்பிதழ், கொண்டாட்டத்தின் எந்த பகுதிக்கு நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள் என்பதைத் தெளிவாக குறிப்பிடும். ஆனால் சில நேரங்களில் அது குறிப்பிடப்படாது, அப்போது அந்தத் திருமணத்தில் இருப்பது மிகவும் சங்கடமாக இருக்கும்; மணமக்கள் உண்மையில் நாம் அங்கே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களா அல்லது நாம் இந்நேரம் கிளம்பியிருக்க வேண்டுமா என்று நாம் யோசிக்க வேண்டியிருக்கும். 😬
எனது வருகை எவ்வளவு தூரம் விரும்பப்படுகிறது என்பதைத் துல்லியமாக காட்டும் தெளிவான அழைப்பையே நான் விரும்புகிறேன்.
இயேசுவும் அதையே விரும்புகிறார். அவரும் நமது அழைப்பின் பேரிலேயே செயல்பட விரும்புகிறார்.
எம்மாவு செல்லும் வழியில் இயேசு இரண்டு சீஷர்களுடன் நடந்து சென்றபோது, அவர் தொடர்ந்து நடந்து போவது போலக் காட்டினார், ஆனால் சீஷர்கள் அவரை வற்புறுத்தி தங்களோடு தங்கும்படி அழைத்தார்கள், எனவே அவர் அவர்களுடன் தங்கினார் (லூக்கா 24:28-29).
இயேசு பலவந்தமாக அவர்கள் வீட்டிற்குள் நுழையவில்லை. அவர்கள் அவரை உள்ளே அழைக்கும் வரை அவர் காத்திருந்தார், அதன் பிறகு அவர் அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான பகுதியாக மாறினார்.
இன்று நமக்கும் இதுவே உண்மை. இயேசு ஒருபோதும் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி நம்மை வற்புறுத்த மாட்டார். அவர் வலுக்கட்டாயமாகத் தன் வழியைத் திணிக்க மாட்டார் அல்லது நம்மை விசுவாசிக்கும்படி மிரட்ட மாட்டார். அவர் நமது வீடுகளுக்குள்ளும் நமது இதயங்களுக்குள்ளும் ஒரு அழைப்பையே எதிர்பார்க்கிறார்.
இயேசு கூறுவது இதுவே:
"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்." – வெளிப்படுத்தின விசேஷம் 3:20
நீங்கள் அவரை உள்ளே அழைக்க விரும்பினால், என்னோடு சேர்ந்து இந்த ஜெபத்தை ஏறெடுங்கள் :
கர்த்தராகிய இயேசுவே, உம்மை என் வீட்டிற்குள்ளும் என் இதயத்திற்குள்ளும் வரவேற்கிறேன். நீர் எனக்குள் உம்முடைய சித்தத்தைச் செய்வீராக. உம்முடைய வழிநடத்துதலுக்கு என்னை எப்படி ஒப்புக்கொடுப்பது என்று எனக்குக் கற்றுத்தாரும், உம்முடைய அன்பினால் என் இதயத்தை நிரப்பும். என்னை வற்புறுத்தாமல் தேடி வந்ததற்கும், நான் இருக்கும் இடத்திலேயே என்னைச் சந்தித்ததற்கும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென்.