விவரங்களில்தான் சூட்சுமம் இருக்கிறதா?
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு, "பிசாசு விவரங்களுக்குள் தான் இருக்கிறது" (the devil is in the details), அதாவது விவரங்களில் கவனம் செலுத்தாமல் போனால் அது பேரழிவில் முடியலாம் என்று பொருள்.
ஆனால் உண்மையில் நான் "தேவன் விவரங்களில் இருக்கிறார்" என்று சொல்லவே விரும்புகிறேன். ஏனெனில், வேதாகமத்தில் உள்ள மிகச்சிறிய விவரங்கள் கூட எவ்வளவு பெரிய முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கக்கூடும் என்பதைக் கண்டு நான் மீண்டும் மீண்டும் வியப்படைகிறேன்.
உதாரணத்திற்கு, சகேயுவின் கதையில், அவன் ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. லூக்கா ஏன் வெறும் "மரம்" என்று மட்டும் எழுதவில்லை? அது காட்டத்தி மரம் என்ற விவரம் ஏன் முக்கியமானது?
வேதாகமத்தில் காட்டத்தி மரங்கள் ஒரு சில முறைகளே குறிப்பிடப்பட்டுள்ளன, ஆனால் லூக்கா எழுதிய சுவிசேஷத்தில் அவை இரண்டு முறை வருகின்றன. ஒன்று சகேயுவின் கதையில், மற்றொன்று இரண்டு அதிகாரங்களுக்கு முன்பு லூக்கா 17-ல் இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும் இடையே நடந்த உரையாடலில் வருகிறது.
தங்களுக்குத் தீங்கு செய்தவர்களை மன்னிக்கும்படி இயேசு கோரிய அந்த மன்னிப்பின் அளவைக் கண்டு சீஷர்கள் திகைப்பிற்கு, “எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும்” (லூக்கா 17:5) என்று கூக்குரலிட்டார்கள்; ஏனெனில் அந்த அளவிலான மன்னிப்பிற்கு அதிக விசுவாசம் தேவை என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்!
ஒரு காட்டத்தி மரத்தைப் (சில மொழிபெயர்ப்புகளில் முசுக்கட்டை மரம் என்றும் வரும்) பிடுங்கி சமுத்திரத்திலே நடப்படுவதற்கு ஒரு கடுகளவு விசுவாசம் இருந்தால் போதும் என்று இயேசு அவர்களுக்கு பதிலளிக்கிறார் (லூக்கா 17:6).
அடுத்த அதிகாரத்தில், சீஷர்கள் மீண்டும் திகைத்துப் போகிறார்கள். ஒரு ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று இயேசு அவர்களிடம் கூறுகிறார் (லூக்கா 18:24-26).
இப்போது சகேயுவைப் பாருங்கள்: ஒரு ஐசுவரியவான், மன்னிப்பு தேவைப்படும் நிலையில் ஒரு காட்டத்தி மரத்தில் இருக்கிறார். சகேயுவிடம் சாத்தியமற்ற ஒன்றைக் காண்கிறோம்: ஒரு மிகப்பெரிய ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்திற்குள் நுழைகிறார்; பாவம் மற்றும் ஊழல் நிறைந்த ஒரு காட்டத்தி மரம் போன்ற வாழ்க்கை மனந்திரும்புதலுக்கு நேராக நகர்த்தப்பட்டு, தேவனாலும் அவருடைய சமூகத்தினாலும் மன்னிக்கப்படுகிறது.
உங்களை இரட்சிக்கவும், மன்னிக்கவும், மரம் போன்ற பெரிய உங்கள் பாவங்களைச் சமுத்திரத்தில் எறியவும் இயேசுவின் மீது ஒரு கடுகளவு விசுவாசம் இருந்தால் போதும்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவரை விசுவாசிப்பது மட்டுமே.