என் வாழ்நாளின் மிக மோசமான விமானப் பயணம்!
இந்த வாரம் நாம் விமான பயணம் பற்றியும், அதிலிருந்து நம் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான சில பாடங்களைப் பற்றியும் பேசி வருகிறோம். இன்று, எனது வாழ்க்கையிலேயே மிக மோசமான ஒரு விமான பயணத்தைப் பற்றி உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
அது அமெரிக்காவில் நடந்தது; நாங்கள் சீயாட்டில் (Seattle) இருந்து கொலோராடோவிலுள்ள டென்வருக்கு (Denver) விமானத்தில் சென்றோம். எனக்கு இந்த விஷயம் அப்போது தெரியாது, ஆனால் கொலோராடோவிற்கான விமானப் பயணங்கள் கடுமையான குலுக்கல்களுக்கும் (turbulence) மற்றும் நடுக்கம் நிறைந்த தரை இறங்குதல்களுக்கும் (landings) பெயர்பெற்றவை. அந்த விமான நிலையத்தின் உயரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைகளே இதற்கு காரணம்.
ஒரு கட்டத்தில், விமானி ஒலிபெருக்கியில் தோன்றி, டென்வர் செல்லும் வழியில் சிறிய அளவிலான குலுக்கல்களை நாம் சந்திக்கக்கூடும் என்று சொன்னார். "சிறிய" என்பது மிகக் குறைவான மதிப்பீடு! அடுத்த 45 நிமிடங்களுக்கு, நாங்கள் எங்கள் இருக்கைகளில் அலைக்கழிக்கப்பட்டோம். நான் இருக்கையிலிருந்து எகிறிவிடக்கூடாது என்பதற்காக என் சீட் பெல்ட்டை பலமுறை இறுக்கிக் கொண்டேன்.
சீட் பெல்ட் அணிவதற்கான சிக்னல் அணைக்கப்படவே இல்லை; தரை இறங்கும் வரை விமானம் முழுவதும் குலுங்கிக் கொண்டே இருந்தது.
இந்த அனுபவத்தை சிந்தித்துப் பார்த்தபோது, ஒரு விமான பயணத்தின் போது ஏற்படும் கரடுமுரடான காற்றுப்பாதைகள் அனைத்தையும் தவிர்க்கக்கூடிய விமானி ஒருவர் கூட இந்த உலகில் இல்லை என்பதை நான் உணர்ந்தேன். அதேபோல், இயேசுவை நம்பும் எந்த விசுவாசியும் வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு புயலையும் தவிர்த்துவிட முடியாது.
இயேசு தாமே இவ்வாறு சொல்லியிருக்கிறார்:
"உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்." – யோவான் 16:33
உங்கள் வாழ்க்கையிலும் சில கரடுமுரடான காற்றுப்பாதைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். ஆனால் குலுக்கல்கள் ஏற்படுவதால் நீங்கள் தவறான வழியில் செல்கிறீர்கள் என்று அர்த்தமல்ல. நீங்கள் வழிதவறிவிட்டீர்கள் என்றும் அதற்கு அர்த்தமல்ல. சொல்லப்போனால், குலுக்கல்கள் ஏற்படுவது நீங்கள் இன்னும் முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறீர்கள் என்பதையே காட்டுகிறது.
தேவன் வாக்குறுதி அளிக்கிறார்:
"நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது." – ஏசாயா 43:2
உங்கள் வாழ்க்கையில் குலுக்கல்கள் ஏற்படும் போதும், தேவன் உங்களோடு இருப்பேன் என்று கொடுத்த வாக்குறுதிக்காக இன்று அவருக்கு நன்றி செலுத்துங்கள்.