நான் அழுகின்ற விதம் 😭
நீங்கள் அடிக்கடி அழுவதுண்டா? அல்லது எப்போதாவது அழுவீர்களா?
நான் அவ்வளவாக அழுபவன் அல்ல, ஆனால் நான் அழும்போது கண்ணீர் தாரைத் தாரையாக வழியும்; அதைப் பார்ப்பது அவ்வளவு அழகாக இருக்காது. 😭 ஜெனி, மற்றும் நிச்சயமாக தேவன் தவிர வேறு யாரும் பார்க்காத ஒரு தனிமையான இடத்தில் அழுவதையே நான் விரும்புகிறேன்!
என் கண்ணீர் ஒருபோதும் வீணாவதில்லை என்பதை உணருவது எனக்கு எப்போதும் ஊக்கமளிக்கிறது. தேவன் என் கண்ணீரைக் காண்கிறார். அவர் அதைப் பார்ப்பதுடன், எனது கூக்குரலையும் கேட்கிறார்:
"கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது." – சங்கீதம் 34:15
நமது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் தேவன் எவ்வளவு தனிப்பட்ட ரீதியில் இணைந்திருக்கிறார் என்பதற்கும், நமது உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகள் மீது அவர் எவ்வளவு ஆழமான அக்கறை கொண்டிருக்கிறார் என்பதற்கும் இது மீண்டும் ஒரு அழகான நினைவூட்டலாகும்.
தேவன் நமது கண்ணீரைக் காண்பது மட்டுமல்லாமல், இன்னும் மேலான காரியங்களைச் செய்கிறார் என்று வேதாகமம் சொல்கிறது:
"என் அலைச்சல்களைத் தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?" – சங்கீதம் 56:8
சில வாரங்களுக்கு முன்பு ஜெனி எழுதிய ஒரு விஷயம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது: பரலோகத்தில் வீதிகள் பொன்னால் அமைக்கப்பட்டிருக்கின்றன (வெளிப்படுத்துதல் 21:21), ஆனால் கண்ணீரோ ஒரு துருத்தியில் கவனமாகச் சேகரிக்கப்படுகிறது. இது உங்களுக்கு எதைச் சுட்டிக்காட்டுகிறது?
இது எவ்வளவு உண்மை! தேவன் உங்கள் கண்ணீரைக் காண்பது மட்டுமல்ல; அவர் அதை மிகவும் விலையேறப்பெற்றதாகக் கருதுகிறார். அவை தேவனுக்குப் பொன்னை விட மதிப்புமிக்கவை.✨
நீங்கள் தேவனுக்கு முக்கியமான நபர்! நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதும், உங்கள் இருதயத்தின் கூக்குரல்களும், உங்கள் தலையணையில் விழும் கண்ணீரும் அவருக்குத் தெரியும். இது ஆச்சரியமாக இல்லையா?
நாம் இணைந்து தேவனுக்கு நன்றி செலுத்தி ஜெபிப்போம்:
பரலோகப் பிதாவே, நீர் எப்போதும் என்னைக் காண்பதற்காக உமக்கு நன்றி. ஒரு துளிக் கண்ணீர் கூட உம்முடைய கவனத்திலிருந்து தப்புவதில்லை என்பதற்காக உமக்கு நன்றி. நீர் என் கூக்குரலைக் கேட்கிறீர் என்பதற்காகவும், நான் எப்படி உணருகிறேன் என்பதை நீர் அறிவீர் என்பதற்க்காகவும் உமக்கு நன்றி. நான் புரிந்து கொள்ள முடிகிறதை விட ஆழமாக நீர் என் மீது அக்கறை காட்டுவதற்காக உமக்கு நன்றி. நீர் செவிகொடுத்துக் கொண்டிருக்கிறீர் என்பதை அறிந்து, இன்று நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். இயேசுவின் நாமத்தில், ஆமென்.