அது என்னுடைய பிரச்சனை இல்லை!
வேலை, தங்குமிடம் அல்லது உடைகளைப் பற்றி நீங்கள் எப்போதாவது கவலைப்பட்டதுண்டா?
நாம் அனைவரும் சில நேரங்களில் கவலைப்படுகிறோம். ஆனால் இயேசு இத்தகைய காரியங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று நம்மை ஊக்குவிக்கிறார். அவரது மிகவும் பிரபலமான போதனையான 'மலைப்பிரசங்கத்தில்', அவர் நமக்கு இவ்வாறு கூறுகிறார்:
"என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும், சாலொமோன் முதலாய் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன். அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்." – மத்தேயு 6:25-32
இந்த வேதப்பகுதியில் மீண்டும் மீண்டும் என்னைக் கவர்ந்த விஷயம் என்னவென்றால், இயேசு நமது தேவைகளைப் பார்க்க வேண்டாம் என்று நம்மை ஊக்குவிக்கிறார். அதற்குப் பதிலாக, அவர் எளிமையாக, "பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்" அல்லது "புஷ்பங்களைக் கவனித்துப்பாருங்கள்" என்று கூறுகிறார்.
ஏன்? ஏனென்றால் அவைகள் தேவனுடைய பராமரிப்பை நமக்கு நினைவூட்டுகின்றன.
தேவைகள் இருப்பதை இயேசு மறுக்கவில்லை, அவை நியாயமான கவலைகள் என்பதையும் அவர் ஒப்புக்கொள்கிறார். ஆனால் அவற்றைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை, தேவன் பார்த்துக்கொள்வார் என்று கூறுகிறார்.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் என்னவென்றால், தேவன் உங்கள் தேவைகளைக் காண்கிறார், எனவே நீங்கள் அவற்றையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை!
தேவன் உங்களுக்கு கொடுத்திருப்பவற்றை கவனிக்க இன்று ஒரு நிமிடம் ஒதுக்குவீர்களா? அதற்காக அவருக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்! 😉