நான் யாரைப் பற்றி பேசுகிறேன் என்று யூகியுங்கள்
நான் அறிந்தவர்களிலேயே கேம்ரன் தான் மிகுந்த சுயநலமற்ற மனிதர் என்று நினைக்கிறேன். அது அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்றாகும், ஏனென்றால் அது எனக்கு இயேசுவை நினைவூட்டுகிறது. அது விவிலியத்தில் உள்ள வேறு ஒருவரையும் எனக்கு நினைவூட்டுகிறது, அவர் இயேசுவை முன்னறிவித்த ஒருவராவார்.
தங்கள் கணவன்மார்களை இழந்த பிறகு ஒன்றாக இஸ்ரவேலுக்குத் திரும்பிய நகோமி மற்றும் ரூத் என்ற மாமியார் மற்றும் மருமகளின் கதையில் அவர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார் (அவர்களுடைய கதையை ரூத் புத்தகத்தில் வாசியுங்கள்).
நான் யாரைப் பற்றி பேசுகிறேன் என்று உங்களுக்குத் தெரிகிறதா?
… அது போவாஸ்! அவர் நகோமியின் பணக்கார உறவினராக இருந்தார், மேலும் அவர் தம்முடைய தயாள குணத்திற்காக அறியப்பட்டவராக இருந்தார் (ரூத் 2:1,20). அவர் அவர்களுக்குரிய சுதந்திரவாளி உறவினராகவும் இருந்தார்.(ரூத் 4:14)
"அது என்ன?" 🧐 நீங்கள் சிந்திப்பது எனக்குக் கேட்கிறது.
இந்தக் கருத்து இப்போது நமக்கு சற்று அந்நியமாகத் தோன்றலாம், ஆனால் அந்த நாட்களில், வறுமையில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவுவதற்கு, சுதந்திரவாளியாகிய உறவினர்கள் பொறுப்பாக இருந்தார்கள். உதாரணத்திற்கு, ஏழையான ஒரு குடும்ப உறுப்பினர் விற்ற நிலத்தை அந்த சுதந்திரவாளி மீண்டும் வாங்கலாம் அல்லது அடிமையாக விற்கப்பட்ட ஒரு உறவினரை மீட்கலாம். அல்லது ரூத் மற்றும் நகோமியின் விஷயத்தில் இருந்தது போல, மரித்துப்போன ஒரு ஆண் குடும்ப உறுப்பினருக்கு ஒரு வாரிசை அவர்கள் ஏற்படுத்திக் கொடுக்கலாம்.
சுதந்திரவாளி உறவினராக இருப்பது என்பது பெரும்பாலும் ஒரு பெரிய தியாகத்தை செய்வதைக் குறிப்பதாக இருந்தது. ரூத் தனக்கு ஒரு குமாரனைப் பெற்றெடுத்தால், அந்தக் குழந்தை தன்னுடைய சந்ததியாகக் கருதப்பட மாட்டான், மாறாக அவன் நகோமியின் குமாரனாகவும், அவளுடைய மறைந்த கணவர் மற்றும் குமாரர்களின் வாரிசாகவும் கருதப்படுவான் என்பதை போவாஸ் அறிந்திருந்தார் (ரூத் 4:14-17).
இது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றாகத் தோன்றுகிறதா? மற்றவர்களின் மீட்புக்காகத் தம்முடைய ஒரே குமாரனை ஒப்புக்கொடுத்த ஒருவர்?
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.” – யோவான் 3:16
பழைய ஏற்பாட்டில் உள்ள பல கதைகளைப் போலவே, ரூத்தின் புத்தகமும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் தியாகத்தையும் அழகாக முன்னறிவிக்கிறது.
போவாஸ் ரூதை மீட்டார், ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு, இயேசு முழு மனிதகுலத்திற்கும் மீட்பராக மாறினார். போவாஸை விட இன்னும் அதிக வீரியமிக்க ஒரு மீட்பர், நம்முடைய பாவங்களுக்காக மரித்து, சிலுவையில் நம்முடைய எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்த ஒரு மீட்பர், நமக்கு இருக்கிறார்.
“அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது”. – எபேசியர் 1:7
தேவனுடைய அன்பு மற்றும் மீட்பிற்காக ஒரு துதிப் பாடலைப் பாடி இன்று நாம் அவருக்கு நன்றி செலுத்துவோம்.