ஒரு அழகான படம் அல்ல, ஆனால் மிகவும் வல்லமை வாய்ந்தது!
பழைய ஏற்பாட்டில் இயேசு எவ்வாறு முன்கூட்டியே பிரதிபலிப்பாக காண்பிக்கப்பட்டார் என்பதைக் கண்டறியும் ஒரு பயணத்தில் நாம் இருந்து வருகிறோம். இன்று நான் சற்று திடுக்கிடச் செய்யக்கூடிய ஒன்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்: ஒரு ஆட்டுக்குட்டி வெட்டப்படுவது. 🔪🐑 ஆனால் என்னோடு தொடர்ந்து வாசியுங்கள், இது உங்களை வியப்பில் ஆழ்த்தும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு வெளியேற ஆவலோடு இருந்தபோது, தேவன் அவர்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டார்:
“வீட்டுத்தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளக்கடவர்கள்... அதை இந்த மாதம் பதினாலாம் தேதிவரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளிக்கவேண்டும்.” – யாத்திராகமம் 12:3,5-7
அன்று இரவு, தேவனுடைய தூதன் எகிப்தின் மேல் நியாயத்தீர்ப்பு வழங்கி, தலைப்பிள்ளைகள் யாவரையும் சங்கரித்தான்–ஆட்டுக்குட்டியின் இரத்தம் நிலைக்கால்களில் பூசப்பட்டிருந்த வீடுகளைத் தவிர மற்ற எல்லா வீடுகளிலும் இது நடந்தது. இந்த நிகழ்வு எகிப்திய பார்வோனுக்குக் கடைசி அடியாக இருந்தது, அவன் ஜனங்களை வெளியேறும்படி அழைத்தான். இறுதியாக, வெற்றி!! 🎉
தேவன் தம்முடைய ஜனங்களை எகிப்திலிருந்து எவ்வாறு புறப்படப்பண்ணினார் என்பதை நினைவுகூர்ந்து, யூத குடும்பங்கள் இன்றுவரை ஆண்டுதோறும் பஸ்கா (Passover) பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள் (யாத்திராகமம் 12). சுமார் 1500 ஆண்டுகளுக்குப் பிறகு, யோவான் ஸ்நானகன் முதன்முதலாக இயேசுவை இவ்வாறு குறிப்பிட்டார்:
“உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி!” – யோவான் 1:29
தேவாலயத்தின் முற்றத்தில் பஸ்கா ஆட்டுக்குட்டிகள் அடிக்கப்பட்ட அதே சரியான நேரத்தில், பஸ்கா பண்டிகையின் போது இயேசு சிலுவையில் அறையப்பட்டார். இது தற்செயலா? முற்றிலும் இல்லை! இது ஒரு தெய்வீகத் திட்டம். மரத்தின் மேல் செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் பூசப்பட்ட பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம், இஸ்ரவேலர்களை ஒரு இரவுக்கு தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து காப்பாற்றியது. ஆனால் சிலுவையின் மேல் சிந்தப்பட்ட உன்னதமான பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய இயேசுவின் இரத்தம், நம்மை என்றென்றைக்குமாக மீட்டெடுத்துள்ளது! “ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே.” – 1 கொரிந்தியர் 5:7
நம்முடைய பாவங்களுக்காகப் பலியிடப்பட்ட, உன்னதமான பஸ்கா ஆட்டுக்குட்டியாக மாறியதற்காக இயேசுவுக்கு நன்றி செலுத்த இன்று ஒரு நிமிடம் ஒதுக்குங்கள்.