அவருக்கு ஒன்றோ இரண்டோ அதிசயங்கள் தேவை!
இனிய திங்கட்கிழமை!✌️மற்றொரு அதிசயம் நிறைந்த வாரத்திற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? இந்த பயணத்தில் நீங்கள் எங்களோடு இங்கே இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.🤗
தன் வாழ்க்கையில் ஒரு சில அதிசயங்கள் தேவைப்படும் நிலைமையில் இருந்த ஒருவர் யோசேப்பு. நீங்கள் அவருடைய கதையை வாசிக்கும்போது, அவருடைய எந்தத் தப்பும் இல்லாமலேயே, அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பத்திலும் காரியங்கள் தவறாகப் போவது போல் தோன்றும். ஆனால் இந்தக் கதை உங்களுடன் பேசுவதற்கு நீங்கள் ஒரு கணம் ஒதுக்கும்போது, அது ஒவ்வொரு திருப்பத்திலும் எப்படி இயேசுவைச் சுட்டிக்காட்டுகிறது என்பதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் (இதை ஆதியாகமம் 37 முதல் வாசியுங்கள்). இந்த வாரத்தில் நாம் அதைத்தான் செய்யப்போகிறோம்!
யோசேப்பு, இயேசு ஆகிய இருவருமே ஒரு அற்புதத்தினால் கருத்தரிக்கப்பட்டார்கள், மேலும் இருவருடைய வாழ்க்கையின் பெரிய நிகழ்வுகளும் சொப்பனங்களில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டன. யோசேப்பு தன் தகப்பனுக்குப் பிரியமானவன் என்று பகிரங்கமாக தனித்துக் காட்டப்படுகிறான், இயேசுவும் பிதாவினிடமிருந்து பகிரங்கமான அங்கீகாரத்தைப் பெறுகிறார்: “அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.” – மத்தேயு 3:17
தன் குடும்பத்தினர் தன்னை வணங்கிகொள்ளவதைப் பற்றிய யோசேப்பின் சொப்பனங்கள், அவனுடைய சகோதரர்களுக்குள் மிகுந்த பொறாமையை மூட்டியதால், அவர்கள் அவனைக் கொலை செய்ய சதி செய்தார்கள். இயேசுவும், உலகத்தை இரட்சிக்க வந்த தேவகுமாரன் என்று தம்மை வெளிப்படுத்தும்போது, அவருடைய சக யூதர்களால் வெறுப்புடன் எதிர்கொள்ளப்படுகிறார். அவர்கள் மிகுந்த கோபமடைந்து, அவரை ஒரு மலையின் உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட முயலுகிறார்கள் (லூக்கா 4:18-30).
இயேசுவும் யோசேப்பும் தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களால் பணத்திற்காகக் காட்டிக்கொடுக்கப்படுகிறார்கள். யோசேப்பு அவனுடைய சகோதரர்களால் 20 வெள்ளிக்காசுக்கு அடிமையாக விற்கப்படுகிறான், இயேசுவோ அவருடைய சொந்த சீஷனாகிய யூதாசினால் 30 வெள்ளிக்காசுக்குக் காட்டிக்கொடுக்கப்படுகிறார்.
யோசேப்பு தன் தகப்பனை விட்டு அழைத்துச் செல்லப்பட்டு, இறுதியில் தன் முழு குடும்பத்தை மட்டுமல்லாமல், சுற்றியுள்ள பல தேசங்களையும் பசியினின்று காப்பாற்றும் ஒரு நிலையை அடைகிறான். இயேசு நம்மை ஆவிக்குரிய பசியிலிருந்து விடுவிப்பதற்காகப் பிதாவினிடமிருந்த தம்முடைய இடத்தை விட்டு வந்தார்; அவர் ஜீவ அப்பமானார்.
இந்த எல்லா சிந்தனைகளையும் நம்ப முடியாத அளவிற்கு அதிசயமாக மாற்றுவது என்னவென்றால், இந்த இரண்டு கதைகளும் 1,500 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளியில் நிகழ்ந்தவை என்பதாகும். இயேசுவின் வாழ்க்கையைப் பற்றிய எதுவும் தற்செயலானது அல்ல; வரலாறு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவரைப் பற்றிக் சாட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இயேசு கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் தேவனாயிருக்கிறார். அவர் முழு வரலாற்றின் மையமாக இருக்கிறார், அப்படியிருந்தும் அவர் உங்களைத் தனிப்பட்ட முறையில் அறிய விரும்புகிறார்.
அதை உங்கள் இருதயத்தில் ஆழமாகப் பதிய வைக்க ஒரு கணம் ஒதுக்குங்கள்.