நான் எப்படி இந்த சிக்கலில் சிக்கிக்கொண்டேன்?
வாழ்க்கையில் எப்போதாவது ஒரு கணம் நின்று, "நான் எப்படி இந்த இக்கட்டான சூழ்நிலையில் வந்து நின்றேன்?" என்று நீங்கள் ஆச்சரியப்பட்டதுண்டா? நிச்சயமாக, நீங்கள் அதில் தனித்து இல்லை! யோசேப்பும் பலமுறை இவ்விதமாகவே உணர்ந்திருப்பார் என்று என்னால் கற்பனை செய்ய முடிகிறது (அவருடைய கதையை ஆதியாகமம் 37 முதல் வாசியுங்கள்).
யோசேப்பின் வாழ்க்கைப்பாதையை நாம் வாசிக்கும்போது, அவரிடத்தילிருந்து எந்தத் தவறையும் நம்மால் கண்டுபிடிக்க முடியாது. அவர் கிட்டத்தட்ட குற்றமற்றவராகத் தோற்றமளிக்கிறார்: சிறந்த குணமும் கடின உழைப்பும் கொண்ட ஒரு மனிதர். தன்னுடைய தவறு எதுவும் இல்லாமலேயே அடிமையாக விற்கப்பட்டார், போத்திபாரின் மனைவியை எதிர்த்து நின்று உண்மையில் பெரும் உத்தமத்தைக் காண்பித்தபோதிலும், பொய்க் குற்றச்சாட்டுகளின் காரணமாக சிறையில் தள்ளப்பட்டார் (ஆதியாகமம் 39).
யோசேப்பு பாவம் செய்யாதவர் அல்ல என்றாலும் (எந்த மனிதனும் அப்படி இல்லை), அவருடைய கிட்டத்தட்ட குற்றமற்ற வாழ்க்கை, மற்றவர்களின் பாவங்களுக்காக தண்டிக்கப்படுவது மற்றொரு நிரபராதியான மனிதரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது: அவர்தான் இயேசு. பாவமறியாத ஒரே மனிதரான இயேசு, பொய்க் குற்றம் சாட்டப்பட்டு, அநீதியாய் சிறையிலடைக்கப்பட்டு, நிரபராதியாகக் கொலை செய்யப்பட்டார்.
"நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்." – 2 கொரிந்தியர் 5:21
இறுதியில், யோசேப்பு தனக்குத் தகுதியான கனத்தைப் பெறுகிறான், எகிப்து தேசம் முழுவதிலும் பார்வோனுக்கு அடுத்தபடியாக மிக உயர்ந்த கனம் அவனுக்குக் கொடுக்கப்படுகிறது (ஆதியாகமம் 41:39-40). இயேசுவும் தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் மிக உயர்ந்த கனத்திற்குரிய இடத்தைப் பெற்றிருக்கிறார், சகல தூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கின்றன (1 பேதுரு 3:21-22).
யோசேப்பின் வாழ்க்கையை வாசிக்கும்போது, அநீதியாகவும் அர்த்தமற்றதாகவும் தோன்றிய தன் எல்லாத் துன்பங்களும் உண்மையில் ஒரு பெரிய கதையின் பகுதி என்பதை யோசேப்பு அறிந்திருந்தாரா? என்று என்னால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. அது ஆழமான மற்றும் தீர்க்கதரிசனமான வழிகளில் இயேசுவை சுட்டிக்காட்டிய ஒரு கதையாகும்.
யோசேப்பின் கதை, நம்முடைய துன்பங்கள் எவ்வளவு நீண்டதாக, கடினமானதாக, மற்றும் அநீதியானதாகத் தோன்றினாலும், அது நம்மால் பார்க்க முடியாத, ஆனால் தேவன் பார்க்கக்கூடிய ஒரு பெரிய திட்டத்தின் பகுதி என்பதை நமக்கு நினைவூட்டும் ஒரு வல்லமை நிறைந்த சான்றாகும்.
நாம் துன்பங்களைக் கிருபையோடு சகித்துக்கொள்ளும்போது, நம்முடைய வாழ்க்கையும், யோசேப்பின் வாழ்க்கையைப் போலவே, இயேசுவுக்கு ஒரு வாழும் சாட்சியாக மாறுகிறது.