தொடர்ந்து கனவு காணுங்கள்! 😴
சொப்பனங்களின் மூலமாக தேவன் எப்போதாவது உங்களுடன் பேசியிருக்கிறாரா? சில நேரங்களில், என்னுடைய கற்பனையின் விளைவாக வரும் சாதாரண சொப்பனங்களை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தோன்றுவதால், சில சொப்பனங்கள் என் மனதில் அப்படியே நிலைத்துவிடுகின்றன.
அந்தச் சிறப்புமிக்க சொப்பனங்கள் தேவனிடமிருந்து வந்தவை என்பதை நான் அறிந்துகொண்டேன், மேலும் அந்தச் சொப்பனங்களின் மூலம் அவர் என்னிடம் என்ன பேச விரும்புகிறார் என்று நான் அவரிடமே கேட்பதுண்டு.
எந்த வகையிலும் நான் என்னை ஒரு சிறந்த சொப்பனம் விவரிப்பவராக கருதவில்லை, ஆனால் அப்படி அறியப்பட்ட ஒருவர்தான் யோசேப்பு. அவர் ஒரு சிறுவனாக இருந்தபோதே, தேவனிடமிருந்து மிகவும் விசேஷித்த சொப்பனங்களைக் கண்டார்.
அவர் கண்ட சொப்பனங்களுள் இரண்டு வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. யோசேப்பு அவற்றைத்தன் சகோதரர்களுடன் பகிர்ந்து கொண்டான்:
“நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்கள் அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது என்றான். அப்பொழுது அவன் சகோதரர் அவனைப் பார்த்து: நீ எங்கள்மேல் துரைத்தனம் பண்ணுவாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ? என்று சொல்லி, அவனை அவன் சொப்பனங்களின் நிமித்தமும், அவன் வார்த்தைகளின் நிமித்தமும் இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள். அவன் வேறொரு சொப்பனம் கண்டு, தன் சகோதரரை நோக்கி: நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான்.” – ஆதியாகமம் 37:7-9
யோசேப்பு எகிப்தின் அதிபதியாகி, தானியம் விற்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது அவனுடைய முதல் சொப்பனம் பல அதிகாரங்களுக்குப் பிறகு நிறைவேறியது; அவனுடைய சகோதரர்கள் அவனிடம் வந்து, அவன் தங்களுக்குச் சில தானியங்களை விற்பான் என்ற நம்பிக்கையில் அவனை வணங்கினார்கள் (ஆதியாகமம் 42:5-6).
ஆனால் யோசேப்பின் இரண்டாவது சொப்பனம், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமாயிருக்கிற இயேசுவில் மட்டுமே உண்மையாக நிறைவேறுகிறது; அவருக்கு முன்பாக வானத்திலும் பூமியிலுமுள்ள யாவருடைய முழங்காலும் முடங்கும், மேலும் அவர் இப்போது பரலோகத்தில் தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார், சகல தூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கின்றன (வெளிப்படுத்தின விசேஷம் 22:16, பிலிப்பியர் 2:10, 1 பேதுரு 3:22).
அவர் முன் ஒவ்வொரு முழங்காலும் முடங்க வேண்டிய ஒரு தேவனை நாம் சேவிக்கிறோம், அப்படியிருந்தும் நாம் அவருடைய கிருபாசனத்தண்டையிலே தைரியமாய்ச் சேரலாம் என்று வேதாகமம் கூறுகிறது (எபிரெயர் 4:16). இன்று உங்களுடைய ராஜாவிடம் நீங்கள் எதைக் கொண்டுவர விரும்புகிறீார்கள்?