இரு பக்கமும் ஆபத்து நிறைந்த இக்கட்டான சூழ்நிலை 🪨😩🧱
“இரண்டு பக்கமும் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் ஒரு குச்சியின் நடுவில் மாட்டிக்கொண்ட எறும்பு” என்ற கதையை எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? இதிலிருந்து தப்பிக்க எந்த வழியும் இல்லை, மேலும் தப்பிக்க இருக்கும் எந்த வழியும் மோசமானவையாக இருப்பதே இந்தக் கதையின் அர்த்தம்.
இது எகிப்தை விட்டு வெளியேறிய உடனேயே இஸ்ரவேலர்கள் தங்களைக் கண்டுகொண்ட சூழ்நிலைக்கு நிச்சயமாகப் பொருந்தும், ஆனால் அவர்கள் ஒரு கடலுக்கும் ஒரு இராணுவத்திற்கும் இடையில் மாட்டிக்கொண்டிருந்தார்கள் (இந்தக் கதையை யாத்திராகமம் 12-14 வரை உள்ள அதிகாரங்களில் நீங்கள் வாசிக்கலாம்.
எகிப்தை, அதன் அடித்தளத்தையே உலுக்கிய தொடர்ச்சியான வாதைகளுக்குப் பிறகு, பார்வோன் இஸ்ரவேலர்களை வெளியேற அனுமதித்தான். களைப்புற்றிருந்தாலும் நம்பிக்கையுடன், இஸ்ரவேலர்கள் பாலைவனத்தை நோக்கித் தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.
ஆனால் விரைவில், அச்சம் சூழ்ந்தது. ஏனெனில் பார்வோன் தன் மனதை மாற்றிக்கொண்டான். தனது அடிமைப் பணியாளர்களை அவ்வளவு எளிதில் போகவிட அவனால் முடியவில்லை, எனவே அவன் தனது படையைத் திரட்டி பாலைவனத்தில் அவர்களைத் துரத்திச் சென்றான்.
குதிரைக் குளம்புகளின் ஓசையும் இரதங்களின் சத்தமும் உரக்க ஒலித்துக்கொண்டிருக்க, இஸ்ரவேலர்கள் செங்கடலை அடைந்தார்கள்—அது ஒரு பரந்த, ஊடுருவ முடியாத நீர்நிலை. அவர்கள் சிக்கிக்கொண்டார்கள். அவர்கள் செல்வதற்கு இடமில்லை. ஓடுவதற்கு வழியில்லை.
இஸ்ரவேலர்கள் மத்தியில் அச்சம் பரவியது. பீதி ஏற்பட்டது. அந்த விரக்தியின் தருணத்தில், அவர்கள் தங்கள் தலைவரான மோசேவிடம் திரும்பி, அவர்மீது குற்றம் சாட்டினர்:
“எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், எங்களுக்கு இப்படிச் செய்தது என்ன? … நாங்கள் வனாந்தரத்திலே சாகிறதைப்பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்குமே என்றார்கள்.” – யாத்திராகமம் 14:11-12
அவர்கள் மோசேயை நம்பியிருந்தார்கள், கடவுளை நம்பியிருந்தார்கள், ஆனால் இப்போது பேரழிவின் விளிம்பில் இருந்தார்கள்.
கடலுக்கும் ஒரு இராணுவத்திற்கும் இடையில் சிக்கி, இந்தப் பாலைவனத்தில் அவர்கள் இறந்துவிடுவார்களா?
ஆனால், அவர்கள் தோல்வியடைவதற்காக தேவன் அவர்களை இவ்வளவு தூரம் கொண்டுவரவில்லை. கடலின் மேல் தன் கோலை நீட்டுமாறு அவர் மோசேவிடம் கூறினார் (யாத்திராகமம் 14:16). மோசேயும் கீழ்ப்படிந்தார். அவர் தன் கோலை உயர்த்தினார், ஆண்டவரின் கட்டளையால், செங்கடலின் நீர் பிரிந்தது. கடல் இரண்டாகப் பிளந்து, இருபுறமும் உயர்ந்த நீர்ச் சுவர்களுடன், நடுவில் ஒரு உலர்ந்த பாதை உருவாகியது.
இஸ்ரவேலர்கள் வியப்புடனும், நடுக்கத்துடனும், சாத்தியமற்ற ஒரு காரியத்தில் அடியெடுத்து வைத்தனர். ஆண்டவரின் மீட்பின் மகத்தான வல்லமையால் சூழப்பட்ட அவர்கள், கடலின் நடுவில் வறண்ட தரையில் நடந்தனர்.
உங்கள் வாழ்க்கையின் எந்தப் பகுதியில் உங்களுக்கு அசாத்தியமானது தேவைப்படுகிறது?