நெருக்கடியின் கீழ் தைரியம்
நீங்கள் சமூக ஊடகங்களில் பார்த்திருக்கலாம், ஆனால் சில மாதங்களுக்கு முன்பு, நான் ஆராதனை நடத்திக்கொண்டிருந்த ஒரு நிகழ்ச்சி, ஒரு சில மத தீவிரவாதக் குழுவினரால் தாக்கப்பட்டது. நல்லவேளையாக, காவல்துறை வந்து நாங்கள் நிகழ்ச்சியை முடிப்பதற்கு அனுமதித்தார்கள். ஆனால் காரியங்கள் முற்றிலும் மாறுபட்ட ஒரு முடிவை நோக்கியும் சென்றிருக்கலாம் என்பதை அது எனக்கு நினைவூட்டியது.
அப்போஸ்தல நடபடிகள் அதிகாரம் 3-இல் நடந்த அற்புதத்திற்கும் வல்லமையான பிரசங்கத்திற்கும் பிறகு, பேதுருவும் யோவானும் கைது செய்யப்படுகிறார்கள்.
மதத் தலைவர்கள் எரிச்சலடைகிறார்கள், குணமாகுதலின் காரணமாக மட்டுமல்ல, இயேசு மீண்டும் மையமாக இருப்பதினாலும் தான். அவர்கள் அடக்கிவிட்டதாக நினைத்த அந்த நாமம் எருசலேமின் வீதிகளில் மீண்டும் எதிரொலிக்கிறது.
அடுத்த நாள், பேதுருவும் யோவானும் சனகதரிம் சங்கத்திற்கு முன்பாகப் பதிலளிக்க வேண்டும்: இயேசுவை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்த அதே தலைவர்கள் தான் அவர்கள்...
பேதுரு சனகதரிம் சங்கத்திற்கு முன்பாக நிற்கும்போது, அவர் குறிப்பிடத்தக்க தைரியத்தோடு பேசுகிறார். சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலேயே இந்த குணமாகுதல் நடந்தது என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார். தலைவர்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது என்னவென்றால், இந்த மனிதர்கள் “படிப்பறியாதவர்களும் பாமரர்களுமாய்” இருந்தது தான். ஆயினும் அவர்கள் ஒன்றை அறிந்துகொண்டார்கள்—பேதுருவும் யோவானும் இயேசுவுடனேகூட இருந்தவர்கள் என்பதை அடையாளம் கண்டுகொண்டார்கள் (அப்போஸ்தல நடபடிகள் 4:13).
தங்கள் விடுதலைக்குப் பிறகு, பேதுருவும் யோவானும் முறையிடவோ அல்லது பின்வாங்கவோ இல்லை. அவர்கள் சபையாரிடம் சென்று ஒன்றாக ஜெபிக்கிறார்கள். வியக்கத்தக்க வகையில், அவர்கள் பாதுகாப்புக் கேட்கவில்லை, மாறாக தைரியம் கேட்கிறார்கள். மீண்டும் ஒருமுறை, அவர்கள் ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவனுடைய வசனத்தைத் தைரியமாய் பேசுகிறார்கள்.
எதிர்ப்பு என்பது தேவன் பிரசன்னமாய் இல்லை என்பதற்கான அடையாளம் அல்ல. மாறாக, நெருக்கடியின் கீழ் தான் நமக்குள்ளே வாழ்கிற காரியம் வெளிச்சத்திற்கு வருகிறது. அவர்களின் தைரியம் சுயநம்பிக்கையிலிருந்து வரவில்லை, மாறாக இயேசுவுடனான தொடர்பிலிருந்து வந்தது.
ஒருவேளை உங்கள் விசுவாசம் வெளிப்படும் போது நீங்களும் கூட நெருக்கடியை அனுபவிக்கலாம். கேள்வி என்னவென்றால், நெருக்கடி ஏற்படுமா என்பது அல்ல, மாறாக நமது பெலனை நாம் எங்கே தேடுகிறோம் என்பது தான். இயேசுவுடனேகூட இருந்த மனிதர்களாக நாம் தோற்றமளிக்கிறோமா?
நீங்கள் இயேசுவோடு வாழ்கிறீர்கள் என்பது உங்கள் வார்த்தைகளிலிருந்தும் அணுகுமுறையிலிருந்தும் தெளிவாகத்த தெரிகிறதா?