மக்களுக்கான இதயம்
நேற்று, அப்போஸ்தலர் 5ல் அனனியா, சப்பீரா ஆகியோரின் அதிர்ச்சியளிக்கும் மரணங்களோடு, ஆரம்பகால சபையின் கடுமையான தொடக்கத்தைப் பற்றி நாம் விவாதித்தோம். ஆனால் பிரச்சனைகள் அத்துடன் முடிவடையவில்லை.
சபை வளரும்போது, பதற்றங்களும் எழுகின்றன. தினசரி உணவுப் பங்கீட்டில் கிரேக்க பாஷை பேசுகிறவர்களின் விதவைகள் புறக்கணிக்கப்படுவதாக உணருகிறார்கள் (அப்போஸ்தலர் 6). வளர்ச்சி ஆசீர்வாதங்களை மட்டுமல்ல, சவால்களையும் கொண்டுவருகிறது.
அப்போஸ்தலர்கள் இதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. அவர்கள் இந்தப் பிரச்சனையைத் தட்டிகழிக்காமல், அதை அங்கீகரிக்கிறார்கள். அதே நேரத்தில், அவர்கள் ஜெபத்திற்கும் சுவிசேஷம் அறிவிப்பதற்கும் தங்களுக்கு இருக்கும் அழைப்பை பாதுகாத்துக் கொள்கிறார்கள். எனவே, நடைமுறை பணிகளை கவனிப்பதற்காக ஏழு நபர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
அவர்களது தேர்வு வியாபார அனுபவத்தின் அடிப்படையில் அமைந்தது அல்ல, மாறாக தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்கள் “ஆவியினாலும் ஞானத்தினாலும் நிறைந்தவர்களாக” இருந்தார்கள் (அப்போஸ்தலர் 6:3). இது உணர்த்தும் செய்தி ஆழமானது.
தேவனின் ராஜ்யத்தில் உள்ள நடைமுறைப் பணிகளும்கூட ஆவிக்குரிய பணிகளே ஆகும். பந்திவிசாரணை செய்வது ஒரு பக்கவாட்டு விஷயம் அல்ல. அது ராஜ்யத்தின் பணி.
இந்த மனிதர்களுள் ஒருவர் ஸ்தேவான், இவர் “விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவராக” இருந்தார் (அப்போஸ்தலர் 6:8). பந்திவிசாரணையில் தொடங்குவது வல்லமையான பிரசங்கத்தில் முடிகிறது. தேவனிடத்தில் சிறிய பணி என்று எதுவும் இல்லை.
ஆவியினால் நிறைந்த ஒரு வாழ்க்கை மேடையில் மட்டுமல்ல, அதற்கு மேலாகப் பின்னணியிலும் விசுவாசமுள்ள ஊழியத்திலும் வெளிப்படுகிறது என்பதை அப்போஸ்தலர் 6 காட்டுகிறது. ஒரு மேடையிலிருந்து செய்யும் ஊழியத்தைப் போலவே, நீதியைச் செய்வதிலும் நலிவடைந்தோரை பராமரிப்பதிலும் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்கிறார்.
ஒருவேளை, பெரிய காரியம் எதையாவது செய்யும்போதுதான் நாம் உண்மையிலேயே அர்த்தமுள்ளவர்களாக இருக்கிறோம் என்று நாம் நினைக்கலாம். ஆனால் தேவனுடைய வல்லமையானது சாதாரணமான மற்றும் அன்றாடக் காரியங்களில் கீழ்ப்படிவதன் மூலமே வெளிப்படுகிறது என்பதை ஆரம்பகால சபை காட்டுகிறது.
இதன் முடிவு என்ன? “தேவவசனம் விருத்தியடைந்தது” (அப்போஸ்தலர் 6:7). ஒவ்வொருவரும் தங்களுக்கு உரிய இடத்தை எடுத்துக்கொள்ளும்போது, தேவனுடைய ராஜ்யம் வளர்கிறது.
இன்று "சாதாரணமானதாகத்" தோன்றும், ஆனால் ஆவிக்குரிய ரீதியில் அர்த்தமுள்ள ஒரு காரியத்தில் தேவன் உங்களை எங்கு பயன்படுத்தக்கூடும்?
ஜெபிப்போம்:
பரலோக பிதாவே, நான் எங்கே, யாருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்பதை எனக்குக் காண்பியும். மக்களுக்கான இருதயத்தை எனக்கு தந்து, நடைமுறைப் பணிகளுக்கான ஞானத்தினாலும் கிருபையினாலும் என்னை நிரப்பும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.