துன்புறுத்தலின் மூலம் பரவுதல்
சமீபத்தில், ஜெனியும் நானும் ஒரு இளம் பெண்ணிடமிருந்து ஒரு அழகான செய்தி அட்டையைப் பெற்றோம். எங்கள் மூலமாக தனது முழு விசுவாசமும் நன்மைக்கென்று தலைகீழாக மாறியதாக அவள் அதில் எழுதியிருந்தாள். எங்கள் ஐந்து வயது மகன் (Zac) ஜாக்-இன் இழப்பிற்குப் பிறகும், நாங்கள் தேவனைத் தொடர்ந்து நேசித்து ஊழியஞ்செய்த விதம் அவளுக்கு ஒரு வல்லமையான சாட்சியாக இருந்தது, மேலும் அது அவளை அதிகமாக ஜெபிக்கவும் நற்செய்தியை வாசிக்கவும் ஏவியது, என்று கூறியிருந்தாள்.
ஜாக்-இன் மரணம் துயரமானது என்றாலும், தேவன் அதை ஒரு அழகான காரியத்திற்காக எவ்வாறு பயன்படுத்தினார் என்பதற்கு, பல உதாரணங்களில் இது ஒன்றாகும்.
ஸ்தேவானுடைய மரணத்திற்குப் பிறகு, கடுமையான துன்புறுத்தல் வெடிக்கிறது. விசுவாசிகள் தங்களது வீடுகளிலிருந்து இழுத்துச் செல்லப்படுகிறார்கள். சபை யூதேயா மற்றும் சமாரியா முழுவதும் சிதறடிக்கப்படுகிறது. இந்த இளம் இயக்கம் மூச்சுத்திணறி நசுக்கப்படுவது போல் தோன்றுகிறது.
ஆனால், அழிவிற்காக உருவாக்கப்பட்டதை, தேவன் வளர்ச்சிக்காக பயன்படுத்துகிறார்.
“சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள்.” (அப்போஸ்தலர் 8:4). அப்போஸ்தலர் 1:8ல் உள்ள வாக்குத்தத்தம் கண்கூடான ஒரு நிஜமாகத் தொடங்குகிறது: சுவிசேஷம் எருசலேமிலிருந்து யூதேயா மற்றும் சமாரியாவிற்குப் பரவுகிறது.
யூதர்கள் வழக்கமாகச் செல்ல விரும்பாத இடமான சமாரியாவில் பிலிப்பு பிரசங்கிக்கிறார். ஆனால் சுவிசேஷம் பழைய பகைகளை உடைத்தெறிகிறது. அந்த நகரத்தில் சந்தோஷம் உண்டாகிறது. அசுத்த ஆவிகள் நீங்குகின்றன. ஜனங்கள் விடுதலைப் பெறுகிறார்கள்.
பின்னர், பிலிப்பு ஆவியானவராலே ஒரு வனாந்தர வழியிலே அனுப்பப்படுகிறார். அங்கே, ஏசாயா தீர்க்கதரிசன புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கிற எத்தியோப்பியா தேசத்தானாகிய ஒரு அதிகாரியை அவர் சந்திக்கிறார். ஒரு உரையாடல், ஒரு விளக்கம், ஒரு ஞானஸ்நானம்: சுவிசேஷம் அப்படியே ஆப்பிரிக்காவிற்குப் பயணிக்கிறது.
எதிர்ப்புகளின் மத்தியிலும் தேவனுடைய நோக்கம் நின்றுபோவதில்லை என்பதை அப்போஸ்தலர் 8 நமக்குக் கற்பிக்கிறது. சில நேரங்களில், நமது திசைதிருப்பல்களைத் தமது திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அவர் பயன்படுத்துகிறார். நமக்கு இழப்பாகத் தோன்றுவது, தேவனுடைய கரத்தில் பெருக்கமாய் மாறக்கூடும்.
கேள்வி என்னவென்றால்: நமது திட்டங்கள் நொறுங்கிப்போகும்போது, தேவனுடைய திட்டம் தொடர்ந்து நிறைவேறும் என்று நாம் நம்புகிறோமா?